“மற்றவர்களுக்கு” வயிற்றெரிச்சலை கிளப்பிய தமிழ்நாட்டின் இரும்புக் காலம்! குமுறலைப் பாரீர்!

viduthalai
3 Min Read

சென்னை,ஜன.28- தமிழ் நாட்டில் இரும்பின் தொன்மை ஆய்வறிக்கை இந்திய தொல்லியல் துறையில் ஒரு திருப்புமுனை என்றாலும், இதனை நிறுவுவதற்கு மேலும் ஆராய்ச்சி தேவை என பிரபல தொல்லியல் ஆராய்ச்சி யாளர் திஷா அலுவாலியா, ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இரும்பின் காலம்

தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் துவங்கியது என்ற மாபெரும் மானுடவியல் ஆய்வு பிரகடனத்தை அறிவிக்கிறேன் என்றும் கடந்த 5,300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமாகி விட்டது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரிலும் சிவகளை யிலும் கிடைத்த இரும்பு தொல்பொருட்களை ஆய்வு செய்தபோது அவற்றின் காலம் கி.மு. 3,345 வரை செல்வதாக, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதாவது, இன்றிலிருந்து சுமார் 5,350 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நாட்டில் இருந்தது கண்டறியப்பட்டிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்த இரு இரும்புப் பொருட்களுடன் இருந்த கரிமப் பொருட்கள் ஏ.எம்.எஸ். என்ற முறையில் காலக் கணக்கீடு செய்யப்பட்டபோது, ஒரு கரிமப் பொருளின் சராசரி மய்ய அளவீட்டுக் காலம் கி.மு. 2172 என்று தெரியவந்தது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாக கருதப்பட்டது. தற்போதைய முடிவுகளின்படி, இரும்பின் பயன்பாடு அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருப்பது தெரியவந்துள்ளது.

ஆய்வறிக்கை

‘இரும்பின் தொன்மை’ என்ற பெயரிலான ஆய்வறிக்கையை வெளியிட்டுப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தற்போது வெளிவந்துள்ள காலக்கணிப்பின்படி உலக அளவில் இரும்பை உருக்கிப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில்தான் முதலில் இருந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தொல்லியல் துறை நடத்திய அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள், தேசிய நிறுவனங்களில் ஓ.எஸ்.எல்., எனும் பகுப்பாய்வுக்கும், பீட்டா ஆய்வகத்தில் கதிரியக்க கால பகுப்பாய்வுக்கும் அனுப்பப் பட்டன.
மூன்று நிறுவனங்களிடம் இருந்தும், ஒரே மாதிரியான பகுப்பாய்வு முடிவுகள் பெறப் பட்டுள்ளன. அதன்படி, தென் மாநிலங்களில் கி.மு 3345 லேயே இரும்பு அறிமுகமாகி விட்டது என்று தெரிய வருகிறது எனத் தெரிவித்தார்.

நாகரிகத்தின் தொட்டில்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பு, உலகளாவிய ஆய்வகங்களின் தொல்பொருள் கண்டுபிடிப்புகளின் அடிப் படையில், தமிழ்நாட்டின் வரலாற்று முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இந்தியாவின் பண்டைய நாகரிகத்தின் தொட்டிலாக தமிழ் நாட்டை நிலைநிறுத்துகிறது. இந்திய வரலாற்றின் வட மாநில மய்யப் பார்வையை தெற்கு நோக்கித் திருப்புவதாக அமைகிறது.
தமிழ்நாட்டின் இரும்புக் காலம் சிந்து சமவெளி நாகரிகத்தின் செப்பு யுகத்துடன் சமகாலமானது என்ற கூற்று, தென்னிந்தியா, குறிப்பாக தமிழ்நாடு, பண்டைய உலகில் ஒரு கலாச்சார மற்றும் தொழில்நுட்ப மய்யமாக இருந்தது என்ற கருத்தை எடுத்துக் காட்டுவதாக அமைகிறது.

குமுறல்

இந்நிலையில், பிரபல தொல்பொருள் ஆய்வாளரான திஷா அலுவாலியா, தமிழ் நாட்டின் இந்த தொல்பொருள் கண்டுபிடிப்புகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘இரும்புக் கால பிரகடனம்’ மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல் பற்றி ‘தி பிரிண்ட்’ ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், திஷா அலுவாலியா கூறுகையில், “20 ஆண்டுகளுக்கு முன்பு உத்தர பிரதேசத்தில் ராகேஷ் திவாரி குழுவினர் மேற்கொண்ட தொல்லியல் அகழாய்வின் மூலம், அங்கு இரும்பின் பயன்பாட்டுக் காலம் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரிவித்தனர். அப்போது அதனை ஆய்வாளர்கள் பலரும் ஏற்கவில்லை. அதன் பிறகு இந்தியாவின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அதற்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்த இரும்பு கண்டுபிடிக்கப் பட்டது.

தமிழ்நாட்டில் ஏராளமான சுரங்கங்கள், கனிம வளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அங்கு இரும்பு பயன்பாடு முன்னரே இருந்திருக்கலாம். ஆனால், அது எவ்வளவு காலம் முந்தையது என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. கி.மு.3500 ஆண்டிலேயே இரும்பு பயன்பாடு இருந்ததாக கூறப்படுவது கேள்விகளுக்கு உட்பட்டது. டேட்டிங் என்பது தொல்பொருள் ஆராய்ச்சியின் ஒரு அம்சம் மட்டுமே.

கேள்விகள்

இந்த கண்டுபிடிப்புகள் பல கேள்விகளை எழுப்புகின்றன. இரும்பு காலம் மற்றும் வெண்கல கால கலாச்சாரங்களுக்கு என்ன தொடர்பு? ஆதிச்சநல்லூரில், சுமார் கி.மு 2060 தேதியிட்ட இரும்புடன் அதிக அளவு வெண்கலம் காணப்படுகிறது, இரும்பு காலம் மற்றும் வெண்கல கால கலாச்சாரங்களுக்கு இடையிலான உறவை எவ்வாறு மறு மதிப்பீடு செய்வது?

இந்த இரும்பு கலைப் பொருட்கள் தென்னிந்தியா முழுவதும் மற்ற சமகால தளங்களுக்கு எவ்வாறு பரவியது அல்லது வர்த்தகம் செய்யப் பட்டது? இதேபோன்ற டேட்டிங் அண்டை மாநிலங்களிலிருந்தும் கிடைக்கப்பெறுவதால், பிராந்திய பரிமாற்றத்தை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது? இதையெல்லாம் தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *