சென்னை,ஜன.26- இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட் ஏவுதல், என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி – எப் 15 ராக்கெட் வரும் 29ஆம் தேதி விண்ணில் பாய்கிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ போக்குவரத்து வழி காட்டுதல் சேவைக்கான நாவிக் தொழில் நுட்பத்தை மேலும் பலப்படுத்த திட்டமிட்டது. இந்தியாவில் தரைவழி, கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்துக்கும், பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பை (அய்ஆா்என்எஸ்எஸ்) உருவாக்க திட்டமிடப்பட்டு 2013 முதல் 2018ஆம் ஆண்டு வரையான கால கட்டங்களில் 8 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
மேம்படுத்தப்பட்ட செயற்கைக் கோள்களை
இதன் மூலம் இந்தியாவுக்கென பிரத்யேக வழிகாட்டி நாவிக் தொழில்நுட்பம் செயல்பாட்டில் உள்ளது. நாட்டின் கண்காணிப்பு பணிகள் அதன் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், அய்ஆா்என்எஸ்எஸ் திட்டத்தில் தற்போதைய அவசியத்துக்கேற்ப மேம்படுத்தப் பட்ட செயற்கைக் கோள்களை விண்ணில் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டது.
அதன்படி இதற்கு முன்பு அனுப்பப்பட்ட அய்ஆா்என்எஸ்எஸ் 1ஜி செயற்கைக்கோளுக்கு மாற்றாக என்விஎஸ் 01 செயற்கைக்கோளை இஸ்ரோ கடந்த 2023ஆம் ஆண்டு மே 29ம் தேதி விண்ணில் நிலைநிறுத்தியது.
இதைத் தொடர்ந்து, தற்போது அதிநவீன தொழில்நுட்பத்துடன் என்விஎஸ்-02 செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி – எப் 15 ராக்கெட் மூலமாக சிறீஅரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஜன. 29ஆம் தேதி காலை 6.23 மணிக்கு ஏவப்படவுள்ளது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனா். என்விஎஸ் – 02 செயற்கைக்கோள் 2,250 கிலோ எடை உடையது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள்.
துல்லியத் தகவல்களை அளிக்க…
இதில் எல் 1, எல் 5, மற்றும் எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டா்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அணுக் கடிகாரம் உள்பட பல்வேறு மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம் பெற்றுள்ளன.
இது மற்ற செயற்கைக் கோள்களுடன் சோ்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும். பேரிடா் காலங்களில் துல்லியத் தகவல்களை தெரிவிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இஸ்ரோ ஆந்திர மாநிலம் சிறீஅரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் வின்வெளி மய்யத்தில் இருந்து ராக்கெட்களை ஏவி வருகிறது. இதுவரை இஸ்ரோ 99 ராக்கெட்களை ஏவியுள்ளது.
இறுதியாக ஸ்பேட்எக்ஸ் திட்டத்திற்காக பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்டை கடந்த மாதம் ஏவியது. இந்நிலையில் வரும் 29ஆம் தேதி ஏவப்படும் ஜிஎஸ்எல்வி – எப் 15 ராக்கெட் இஸ்ரோவின் 100 ராக்கெட் ஏவுதல் என்பது குறிப்பிடத்தக்கது.