முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: நான் முதலமைச்சராக இருக்கும் வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன். சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது. இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது. மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அதிமுகவும் துணைபோக கூடாது.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன்: தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து, தமிழ்நாடு அரசின் வேண்டுகோளை ஏற்று #டங்ஸ்டன் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
சுரங்கத் துறை அமைச்சர் கிசன் ரெட்டியைச் சந்தித்து இந்த கோரிக்கையை நான் வைத்த போது ‘தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தமாட்டோம், தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இன்றி இந்தத் திட்டத்தை செயல்படுத்தமாட்டோம்’ என்று தெரிவித்தார் அதன் போலவே அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் அவருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றி!
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: அரிட்டாப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள மக்களின் உறுதியான போராட்டமும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றிய தனித் தீர்மானமும் கார்ப்பரேட்டுகளுக்கு துணை போக இருந்த ஒன்றிய பாஜக அரசின் முயற்சிகளை தவிடு பொடியாக்கியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: வெற்றி பெறும் வரை ஒன்றுபட்டு போராடிய பொதுமக்களுக்கும், மக்கள் உணர்வுகளை பிரதிபலித்த தமிழ்நாடு அரசுக்கும், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு கூறியுள்ளனர்.