சிறுநீரகம் உடலின் ஒரு முக்கியமான உறுப்பு. இரத்தத்தை சுத்தப்படுத்துவதிலும், இரத்த ஒட்டத்தில் கலந்திருக்கும் கழிவுகள் அதிகப்படியான நீர், உடலில் சேரும் நச்சுகள் உள்ளிட்டவற்றை வெளியேற்றுவதில் சிறுநீரகம் முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்தக் கழிவுப் பொருட்கள் சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்பட்டு சிறுநீர் வழியாக வெளியேறுகின்றன.
சிவப்பு அணுக்கள்
உடலில் பி.எச். அளவு, உப்பு, பொட்டாசியம் போன்றவற்றின் அளவை சம நிலையில் வைத்திருக்க சிறுநீரகங்கள் உதவுகின்றன.
ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தவும், ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும் உதவும் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கும் துணை புரிகின்றன. ஆகையால், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க சிறுநீரகத்தை பேண வேண்டியது அவசியமாகும்.
சிறு நீரகம் பிரச்சினை ஏற்பட்டாலோ, சரியாக செயல்படாமல் போனாலோ அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
சிறுநீரகங்கள் மனிதனுக்கு இரண்டு உண்டு. அது அவரை விதை வடிவத்தில் காணப்படும். ஒன்று ரத்தத்தில் இருந்து கழிவுகளை தூய்மைப்படுத்தி நீக்குகிறது. இரண்டாவது உடலிலுள்ள நீரையும், உப்பையும் ஒழுங்குப்படுத்துவது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அறிக்கையின்படி இந்தியாவில் ஏற்படும் இறப்புகளுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் ஒன்பதாவது முக்கிய காரணமாகும்.
உலகில் 6.97 கோடி பேர் கடுமையாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1.15 கோடி பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் வயது நீரிழிவு நோய்க்கு முறையாக சிகிச்சை பெறாமை, நீண்ட நாள் நீர்தாரை அடைப்பு, சிறுநீரக கிருமித் தொற்று போன்ற பல்வேறு காரணங்களால் சிறுநீரகம் முழுவதும் பாதிப்பு அடைகின்றன.
பசியின்மை
இதன் அறிகுறியாக பசியின்மை, வாந்தி, உடல் சோர்வு, சிறுநீரக அளவு குறைதல், கால் வீக்கம், மூச்சுத் திணறல், இரத்த சோகை போன்ற பல்வேறு அறிகுறிகள் ஏற்படும். வயது முதிர்வில் அவ்வளவு எளிதாக அறியப்படுவதில்லை. மற்ற காரணங்களுக்கு பரிசோதனை செய்யும்போது சிறுநீரக பாதிப்பு தெரியவரும்.
சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றுகள்
சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் போவது, இரவில் தூங்க முடியாமல் சிறுநீர் பிரிவது, காய்ச்சல், வாந்தி, நினைவாற்றல் குறைவது போன்றவை சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்றின் அறிகுறியாகும்.
பெரும்பாலும் வயதான ஆண்களுக்கு முன்னிலை சுரப்பி (பிராங்டேட்) வீக்கத்தினால் சிறுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு சிறுநீர்ப்பையில் சிறுநீர் தங்கி தொற்று ஏற்படக் கூடும்.
நாள்பட்ட நீரிழிவு நோய், நரம்புத் தளர்ச்சியினால் பாதிக்கப்பட்ட வயதானவர் களுக்கு சிறுநீர்ப்பை பலவீனமடைந்து சிறுநீர் பிரிவதில் சிரமமும், சிலருக்கு சிறுநீரினை அடக்க முடியாமல் தானாகவே வெளியேறுவது போன்றவைகள் ஏற்படும்.
வயதான பெண்களக்கு கர்ப்பப்பை இறக்கத்தினாலும், சிறுநீர் தாரையில் அடைப்பு ஏற்படுவதினாலும், சிறுநீர் பிரிவதில் சிரமம் ஏற்படும். இதற்குரிய பரிசோதனைகள் செய்து உரிய சிகிச்சை பெற வேண்டும்.
சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகள்
1. நீரிழிவு நோய் இருந்தால் இரத்தச் சர்க்கரையை கட்டுப்பாடுடன் வைக்க வேண்டும்.
2. உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இரத்த அழுத்தத்தை தவறாமல் பரிசோதிக்க வேண்டும்.
3. சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றுகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும்.
4. தேவைப்பட்டால் உணவு மற்றும் மருந்துகளின் மூலம் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும்.
5. அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
6. சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு குறைவாகவும், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
7. புகைபிடிக்கக் கூடாது. மதுப் பழக்கத்தையும் தவிருங்கள்.
8. வயதுக்கு ஏற்ற எடையை பராமரிக்க வேண்டும்.
9. ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடம் மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். யோகா, மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளலாம். இது சிறுநீரக நோய் ஏற்படுவதை தவிர்க்கும். இரத்த அழுத்த அளவை குறைக்கவும், சிறுநீரக நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அதிக உப்பைத் தவிர்ப்பது நல்லது.
10. அதிக உப்பு சிறுநீரக செயல்பாட்டுக்கு சிரமம் கொடுக்கும்.
11. சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.