மயிலாடுதுறை மாவட்டத்தில் கடுமழையால் நெற்பயிர்கள் சேதம் விவசாயிகள் வேதனை!

viduthalai
1 Min Read

மயிலாடுதுறை, ஜன. 20- மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மயிலாடுதுறை விவசாயிகள் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தின் இறுதியில் நடவு செய்யப்பட்ட பயிர்கள், தற்போது அறுவடைக்குத் தயாராகிய நிலையில், நீரில் மூழ்கியது.

இந்நிலையில், நேற்று (19.1.2025) தரங்கம்பாடி, செம்பனார்கோவில், மயிலாடுதுறை பகுதிகளில் அதிகளவு மழை பெய்துள்ளது.
தண்ணீரில் மிதக்கிறது

இதனால், மயிலாடுதுறை, நல்லத்துக்குடி, செருதியூர், மன்னம்பந்தல், குளிச்சார், மூங்கில் தோட்டம், கோடங்குடி, கழனிவாசல், கொற்கை, தாழஞ்சேரி, பாண்டூர், பொன்னூர், காளி, அருண்மொழிதேவன், ஆனந்ததாண்டவபுரம், சேத்தூர், மூங்கில்தோட்டம், திருக்கடையூர், காளகஸ்திநாதபுரம், முத்தூர், விசலூர், பெரம்பூர், காட்டுச்சேரி உட்பட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்குத் தயாரான பயிர்கள், கனமழையில் வயலில் சாய்ந்து தரையோடு தரையாகத் தண்ணீரில் மிதக்கிறது.

மேலும் அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பு வயலில் விதைக்கப்பட்ட உளுந்து, பயிறு வகை பயிர்களும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பயிர்கள் குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் முறையாகக் கணக்கெடுப்பு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

உளுந்து

மாவட்ட வேளாண் துறை இது குறித்து வெளியிட்டுள்ள புள்ளிவிவரக் குறிப்பில், “மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு சம்பா பருவத்துக்கு 68,880 ஹெக்டரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அதில் 26,850 ஹெக்டர் நெற்பயிர்கள் நீரால் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 541 ஹெக்டரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், 269 ஹெக்டர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

மேலும், 940 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து பயறு வகை பயிர்கள் 100 சதவீதம் அதாவது 940 எக்டேரும் நீரால் சூழப்பட்டுச் சேதமடைந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *