கொல்கத்தா, ஜன.19– பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாக பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியுள்ளார்.
துணைவேந்தர் நியமனம்
பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல மாநிலங்களில் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
அதேநேரம் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) சமீபத்தில் வெளியிட்ட வரைவு அறிக்கையில், துணைவேந்தரை ஆளுநரே நியமிக்கும் வகையில் புதிய விதிகள் குறிப்பிடப்பட்டு இருந்தன.
இதற்கு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
இந்த நிலையில் துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநர்களுக்குத்தான் முக்கிய பங்கு இருப்பதாக யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கொல்கத்தாவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஆளுநர்களுக்கு முக்கிய பங்கு
நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்தோ அல்லது அதற்கு முன்பிருந்தோ, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர்களுக்குத்தான் சிறப்புரிமை இருந்தது.
எனவே துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பான வரைவு அறிக்கையில் புதிய மாற்றம் எதுவும் இல்லை
‘யு.ஜி.சி.யின் 2010ஆம் ஆண்டு ஒழுங்கு முறையிலும் துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநர்களுக்கே முக்கிய பங்கு அளிக்கப்பட்டு இருந்தது.
துணைவேந்தருக்கான தேர்வுக் குழுவில் மாநில பிரதிநிதிக்கு ஒரு பங்கு உண்டு. அவரை உள்ளடக்கிய அந்த தேர்வுக்குழு 4 அல்லது 5 பெயர்களை வேந்தருக்கு (ஆளுநர்) அனுப்புகிறது. அந்தப் பட்டியலில் இருந்து ஒருவரை அவர் தேர்ந்தெடுக்கிறார்.
ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
யு.ஜி.சி. வரைவு விதிமுறையில் பல்வேறு பரிந்துரைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் துணைவேந்தர் நியமனத்தில் வேந்தரின் பங்கு குறித்து கூறப்பட்டு உள்ளது. அது ஒன்றிய மற்றும் மாநில பல்கலைக்கழகங்களுக்கானது.
உயர்தரக் கல்வியை வழங்க ஒன்றிணைந்து செயல்படுவது நமது பொறுப்பு. யு.ஜி.சி. என்ன விதிமுறைகளை அறிவித்தாலும், அது நமது பல்கலைக்கழகங்களை உலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றுவதே ஒரே நோக்கம். எனவே இந்த விதிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு ஜெகதீஷ் குமார் கூறினார்.