கோவை, ஜன.18- கோவையில் ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரில், சாலையோரத்தில் மாட்டிறைச்சி கடை நடத்தக்கூடாது என்று முஸ்லிம் தம்பதியரை மிரட்டிய பாரதிய ஜனதா நிர்வாகியை கைது செய்ய வேண்டுமென்று காவல்துறையிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இரு சமுதாயத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடந்திருப்பதால் அதன்பேரில் நடவடிக்கை எடுக்குமாறு பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சிக் கடை
இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?
கோவை விளாங்குறிச்சி சாலையில் உள்ள உடையாம்பாளையத்தைச் சேர்ந்த ரவி–-ஆபிதா தம்பதியினர், சர்க்கார்சாமக்குளம் நடுநிலைப் பள்ளி அருகில் தள்ளுவண்டியில் மாட்டிறைச்சி பிரியாணிக் கடை வைத்துள்ளனர்.
இந்தக் கடைக்கு, உணவு பாதுகாப்புத்துறையிடம் சாலையோர உணவுக் கடை என்று முறைப்படி பதிவு செய்து அதற்கான சான்றிதழ் பெற்று நடத்தி வந்துள்ளனர்.
இந்தக் கடையை நடத்துவதற்கு, மாநகராட்சியிடமும் முறைப்படி உரிமம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார் ரவி.
இதே பகுதியில் தள்ளுவண்டிகளில் வேறு சில அசைவ உணவகங்களும் நடத்தப்படுகின்றன.
கடந்த டிசம்பர் 25ஆம் தேதியன்று, ரவி-–ஆபிதா கடைக்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த பாஜக இதர பிற்படுத்தப்பட்ட அணியின் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி மற்றும் சிலர், மாட்டிறைச்சிக் கடை நடத்தக்கூடாது என்று மிரட்டியதாக ஆபிதா பெயரில் மாநகர காவல் ஆணையரிடம் தரப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி கூறிய ஆபிதா, “எங்களை அவர் மிரட்டியபோது, பக்கத்தில் மீன் கடை, சிக்கன் கடை இருக்கும்போது, எங்களை மட்டும் ஏன் எடுக்கச் சொல்கிறீர்கள் என்று கேட்டோம். அதற்கு மாட்டிறைச்சிக் கடை போடக்கூடாது என்று அவரும், அவருடன் வந்த 6 பேரும் மிரட்டினார்கள்.
அன்று கடை போட முடியாமல் எல்லாமே வீணாகிவிட்டது. அதற்குப் பிறகு மீண்டும் கடையைத் திறந்தோம். பின்பு, ஜனவரி 5ஆம் தேதியன்று மீண்டும் வந்து எங்களை மிரட்டினார்” என்று தெரிவித்தார்.
புகார்
காவல்துறையில் இவர்கள் மீது புகார் தெரிவிப்பதற்கு முன்பே, இவர்களுடைய கடையில் சுப்பிரமணி பேசும் காட்சிப் பதிவு, சமூக ஊடகங்களில் பரவலாகியது. அதில் கடையை எடுக்கச் சொல்லும் சுப்பிரமணியிடம், மீன் கடை, சிக்கன் கடை இருக்கும்போது, மாட்டிறைச்சிக் கடை மட்டும் ஏன் போடக்கூடாது என்று ஆபிதா பலமுறை கேள்வி எழுப்புகிறார்.
அதற்கு சுப்பிரமணி, ‘ஊர்க்கட்டுப்பாடு. மாட்டிறைச்சிக் கடை போடக் கூடாது’ என்கிறார். இவர்களின் வாக்குவாதத்தில், ஊர்த்தலைவர், கவுன்சிலர் பெயர்களும் இடம் பெறுகின்றன.
இந்த காட்சிப் பதிவு சமூக ஊடகங்களில் பரவியதும், அதை வைத்துப் பலரும், “உத்தரப் பிரதேசம் போல கோவையில் ஊர்க்கட்டுப்பாடு; மாட்டிறைச்சிக் கடை நடத்தத் தடை” என்று கருத்துகளைப் பதிவிட்டனர். அதன்பின், சுப்பிரமணி தரப்பில் சமூக ஊடகங்களில் ஒரு காட்சிப் பதிவு வெளியிடப்பட்டது.