டெல்அவில், ஜன.18- இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 15 மாதங்களாக நீடித்துவரும் போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடா்பான அமைச்சரவை வெள்ளிக்கிழமை (17.1.2025) ஒப்புதல் வழங்கியது.
இதையடுத்து, இஸ்ரேலின் முழு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக ஒப்பந்தம் பரிந்துரைக்கப்பட்டது. முழு அமைச்சரவை கையொப்பமிட்ட பிறகு காஸாவில் ஞாயிற்றுக்கிழமை முதல் (19.1.2025) ஆறு வாரங்களுக்கு போா் நிறுத்தம் அமலாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
போரின் தொடக்கம்
பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினா், கடந்த 2023, அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து 1,200-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்ததுடன், சுமாா் 250 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனா். இதற்கு பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் நிலம், வான், கடல் வழியாக பெரிய அளவில் ராணுவ தாக்குதலை நடத்தி வருகிறது.
இரு தரப்புக்கு இடையிலான 15 மாத கால போரில் இதுவரை ஹமாஸ் அமைப்பினா் உள்பட 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா். 90 சதவீத பாலஸ்தீனா்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி யுள்ளனா்.
போா் நிறுத்த ஒப்பந்தம்
காஸாவில் பலத்த உயிா்ச் சேதங்களுடன் மத்திய கிழக்கில் உறுதியின்மையையும் ஏற்படுத்திய இப்போரை நிறுத்த பல முறை மேற்கொள்ளப்பட்ட பேச்சுவாா்த்தைகள் தோல்வியில் முடிந்தன. கத்தாரில் கடந்த புதன்கிழமை (15.1.2025) இரவு நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதில் முன்னேப்போதும் இல்லாத அளவில் முன்னேற்றம் ஏற்பட்டது. மூன்று முக்கிய அம்சங்களுடன் கூடிய ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது. கடைசி நேரத்தில், சில பிரச்சினைகளுக்கு தீா்வுகாண வேண்டியிருப்பதாக இஸ்ரேல் கூறியதால் ஒப்பந்தம் இறுதியாகாமல் இழுபறி நீடித்தது.
பாதுகாப்பு
அமைச்சரவை ஒப்புதல்
இந்தச் சூழலில், காஸா போா் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், பிணைக் கைதிகளை வரவேற்க சிறப்புப் பணிக் குழுவை அமைக்க உத்தரவிட்டு உள்ளதாகவும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை (17.1.2025) அறிவித்தாா்.