சிதம்பரம் தீட்சிதர் தேரோட்டமும் ஜாதித் தீப்பந்தமும்…

viduthalai
3 Min Read

கடந்த 12.01.2025 அன்று உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் நான்கு வீதிகளில் தேர் திருவிழா நடைபெற்றது. தமிழர் தேசிய முன்னணி (பழ.நெடுமாறன் அமைப்பு) கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் பாலு (வயது 75) நாடராஜர் கோவிலின் கீழ் சன்னதியில் 3ஆவது கடையாக பூஜை பொருட்கள் விற்பது மற்றும் காலணிகள் பாதுகாப்பு கடையை 20 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறார்.

தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக சிதம்பரம் தீட்சிதர்கள் தேர் திருவிழா அன்று கீழ் சன்னதியின் வழியாக செல்லும் போது காலை மற்றும் மாலையில் கடையில் நின்று சூடம் ஏற்றி, மலர் தூவி வழிபாடு செய்வதற்கு தீட்சிதர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. அடிப்பது, கடை புகுந்து சட்டையைக் கிழிப்பது, தீப்பந்தத்தை மேலே வீசுவது, அவருடைய தீபாராதனை தாம்பாளத்தை தட்டி விடுவது என்று அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முன்னெச்சரிக் கையாக தோழர் பாலு அவர்களும் அவருடைய அமைப்பைச் சார்ந்த வர்களும் மாவட்ட ஆட்சியர், காவல் துறை காண்காணிப்பாளர், சார் ஆட்சியர் அவர்களுக்கு கோரிக்கை மனு அளித்தனர். அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மாவட்ட அரசு அதிகாரிகள் எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை.

சிதம்பரத்தில் உள்ள அம்பேத்கரிய, மார்க்சிய, பெரியாரிய, தமிழ்தேசிய உணர்வாளர்களை தோழர்.பாலு அவருடைய அமைப்பு தோழர்கள் சந்தித்து அவருடைய கருத்தையும், கோரிக்கையையும் எடுத்துக் கூறி ஆதரவு திரட்டினர். கான்சிராம் பாசறையை ஒருங்கிணைக்கும் எனக்கு அழைப்பு வந்தது தாதாசாகேப் கான்சிராம் கொள்கை ஜாதி, மதம் கடந்து (பெரும்பான்மை (OBC,SC,ST) மக்களின் நலன் மற்றும் பெரும்பான்மை மக்களின் மகிழ்ச்சியே பகுஜன் கொள்கைப்படி) பாலு அழைப்பை ஏற்று கீழசன்னதி கடைக்கு வந்தேன் அவருக்கு வழிபாட்டு உரிமைக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு 10 தோழர்கள் வந்திருந்தோம்.

இந்தநிலையில் தேர் திருவிழா ஆரம்பித்தது காலை மற்றும் இரவு நேரங்களில் சிதம்பரம் காவல் துறை காண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் கடையின் முன்பு பாதுகாப்பு பணியில் 50க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த காவலர்கள், உளவுப்பிரிவினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இரவு 9:30 மணியளவில் அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் கடைக்குள்ளே வந்து எத்தனை பேர் பாதுகாப்புக்கு வந்தீங்க என்று கேட்டார். 10 பேர் என்றோம். அவசியம் பூ போட்டுதான் ஆக ணுமா என்று மிரட்டும் தொனியில் பேசிவிட்டு வெளியே சென்றார். பிறகு கண்காணிப்பாளர் லாமேக் கடையில் அமர்ந்தார்.

30க்கும் மேற்பட்ட காவலர்களு டன் கடையின் முன் காவல் துறை தடுப்பு அமைக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுமார் 10 மணியளவில் தோழர் பாலு சூடம் ஏற்றி, பூ தூவினார். தில்லை தீட்சிதர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் தோழர் பாலு கடையின் முன் தீப்பந்தத்தை ஏந்தி வந்தனர். காவலர்கள் தடுப்பு கவசத்தை கொண்டு தடுக்கும் போது 1 நிமிடம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்பாவி காவலர்கள் மீது தீப்பந்தம் சுட்டது கழுத்து தலை முடி பொசுங்கியது. காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடவில்லை என்றால் தோழர் பாலு மீது தாக்குதல் நடை பெற்றிருக்கும்.

களத்தில் நின்று கவனித்ததால் பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் சொன்ன பார்ப்பனீய சித்தாந்த ஜாதித்( தீ) கண்முன்னே தெரிந்தது.

சிதம்பரம் நந்தன் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..
களத்தில்…
ஆசிய ஜோதி
ஒருங்கிணைப்பாளர், கான்சிராம் பாசறை, தமிழ்நாடு

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *