எச்சரிக்கை

viduthalai
3 Min Read

அறிமுகம் இல்லாதவரிடம் செல்பேசியை கொடுக்காதீர்
மோசடி செய்ய வாய்ப்பு

புதுடில்லி, ஜன.17 செல்பேசியில் புதிய செயலியை பதிவிறக்கும் செய்தும், செட்டிங்கை மாற்றியும் வங்கி கையிருப்பை காலி செய்யும் புது மோசடி நடைபெறுவது குறித்து ஜெரோதா நிறுவனத்தின் சிஇஓ நிதின் காமத் சமூக ஊடகத்தில் வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செல்பேசி

அறியா மக்களை ஏமாற்றி அவர்களின் வங்கி கையிருப்பை காலி செய்யும் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த மோசடி சம்பவங்களை புதுப்புது முறைகளில் அரங்கேற்றி வருகின்றனர். அதுபோன்ற புது மோசடி குறித்த காட்சிப் பதிவு ஒன்றை ஜெரோதோ என்ற இணையதள பங்குச் சந்தை வர்த்தக நிறுவனத்தின் சிஇஓ நிதின் காமத் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மோசடி நபர்கள் எவ்வாறு செயல்பட்டு அறியா மக்களின் வங்கிப் பணத்தை சுரண்டுகின்றனர் என்பது விவரிக்கப்பட்டுள்ளது.

மோசடி

அறிமுகம் இல்லாத நபர் ஒருவர், அவசர அழைப்புக்காக ஒருவரிடம் அவரது செல்ேபசியை கேட்கிறார். செல்பேசி அழைப்புக்கு தற்போது தனியாக கட்டணம் வசூலிக்கப்படாததால், பலர் தங்கள் செல்போன்களை அறிமுகம் இல்லாத நபர்களிடம் அளிக்கின்றனர்.

அறிமுகம் இல்லாத நபர் செல்பேசியை வாங்கியதும் செல்பேசி எண்ணை டயல் செய்வது போல், செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்கிறார் அல்லது ஏற்கெனவே உள்ள செயலியை திறந்து பார்க்கிறார் அல்லது செல்பேசி செட்டிங்கை உடனடியாக மாற்றிவிடுகிறார். இதன் பின் அந்த செல்பசிக்கு வரும் அழைப்புகள், மற்றும் எஸ்எம்எஸ் தகவல்கள் வேறு எண் கொண்ட செல்பேசிக்குச் செல்கிறது. தனிப்பட்ட தகவல்களும் திருடப்படுகின்றன. வங்கியிலிருந்து வரும் ஓடிபி எண்களும் மோசடி நபர்களின் செல்பேசிக்கு சென்று விடும். அதன்பின் செல்பேசியை கொடுத்த நபர்களின் வங்கி கணக்கில் உள்ள சேமிப்பு பணம் முழுவதும் காலியாகிவிடும்.

இதனால் அறிமுகம் இல்லாத நபர்கள் யாராவது அவசர அழைப்புக்காக செல்பேசியை கேட்டால், அவரிடம் செல்பேசி எண்ணை கேட்டு நீங்களே டயல் செய்து ஸ்பீக்கரை ஆன் செய்து அந்த நபரை பேசவைப்பது பாதுகாப்பானது. இந்த விழிப்புணர்வு காணொலி சமூக ஊடகத்தில் பகிரப்பட்டதில் இருந்து இதுவரை 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். மாநில மொழிகளில் இத்தகவலை மொழிபெயர்ப்பு செய்து வெளியிட வேண்டும் எனவும் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இணையதளத்தை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 90 கோடி

இந்தியா

புதுடில்லி, ஜன.17 இந்தியாவில் நடப்பு ஆண்டில் இணையதள பயனாளர் எண்ணிக்கை 90 கோடியை தாண்டும் என ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.

90 கோடி

இந்திய இணையதளம் மற்றும் செல்போன் சங்கம் (அய்ஏஎம்ஏஅய்) மற்றும் சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கன்டர் சார்பில் ‘இந்தியாவில் இணையதளம் 2024’ என்ற பெயரில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் 2024-ஆம் ஆண்டில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 88.6 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 8% அதிகம். இந்த எண்ணிக்கை 2025-ல் 90 கோடியைத் தாண்டும். நாட்டில் இணையதளம் பயன்படுத்துவோரில் 55% பேர் (48.8 கோடி) கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால் நகர்ப்புறங்களில் இந்த எண்ணிக்கை 39.7 கோடியாக இருந்தது. இணையதள பயன்பாட்டாளர்களில் 47% பேர் பெண்கள்.

சராசரியாக இந்தியர்கள் ஒரு நாளைக்கு 90 நிமிடங்கள் இணையதளத்தை பயன்படுத்து கின்றனர். இதில் கிராமவாசிகள் 89 நிமிடங்களும் நகரவாசிகள் 94 நிமிடங்களும் பயன்படுத்துகின்றனர்.

இணையதள பயன்பாட்டில் கேரளா (72 சதவீதம்), கோவா (71 சதவீதம்), மகாராட்டிரா (70 சதவீதம்) ஆகியவை முதல் 3 இடங்களில் உள்ளன. பீகார் (43 சதவீதம்), உத்தர பிரதேசம் (46 சதவீதம்), ஜார்க்கண்ட் (50 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் கடைசி 3 இடங்களில் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *