ஒத்திசைவு என்பதுதான் ‘கன்கரண்ட்’ பட்டியல் என்பதற்குப் பொருள்!
கல்விமீது ஒன்றிய அரசு ஆதிக்கம் செலுத்தும் நிலையிலிருந்து விடுபட
மாநிலப் பட்டியலுக்கே கல்வி மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும்
கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்தால்தான் ஒன்றிய அரசுதன் விருப்பத்துக்கு மாநிலங்களை ஆட்டிப் படைக்கும் நிலையிலிருந்து விடுபட முடியும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று (11.1.2025) மாலை பெரியார் திடலில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள், டாக்டர் ஏ.கே. ராஜன், அரிபரந்தாமன், பாரதிதாசன் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பெ. ஜெகதீசன் ஆகியோர் ஆற்றிய உரையின் மய்யக் கருத்தாக இருந்தது. உரை சுருக்கம் வருமாறு:
அண்மையில் பல்கலைக் கழக நிதியாளுகை ஆணையம் (University Grants Commission) மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும் வகையிலும் சில வரைவு வழிமுறைகளை உருவாக்கி பொதுவெளியில் வெளியிட்டுள்ளது. மாநில அரசின் கட்டுப்பாட்டில், குறிப்பாக தன்னாட்சி அதிகார நிர்வாகம் பெற்ற பல்கலைக் கழகங்களின் செயல்பாட்டைஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் போக்கில் – குறிப்பாக ஹிந்துத்துவா நிகழ்ச்சி நிரலில் உள்ள ஒற்றை அரசாங்க அதிகாரத்தை நோக்கி கொண்டு செல்லும் போக்கில் அந்த நெறிமுறைகள் அமைந்துள்ளன.
யுஜிசி வரைவு வழிமுறையினை எதிர்த்து
ஆசிரியரின் அறிக்கை
யு.ஜி.சி. வரைவு வழிமுறைகள் வெளிவந்தவுடனேயே அவை ஏற்படுத்த உள்ள பாதிப்புகள் – உயர்கல்வி நிறுவனங்களில் ஏற்படவுள்ள நிர்வாக அதிகார மாற்றங்கள் குறித்து விரிவான கண்டன அறிக்கையினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுதலை (8.1.2025) நாளேட்டின் மூலமும் பிற செய்தி ஊடகங்கள் வாயிலாகவும் வெளியிட்டிருந்தார்.
மேலும் வழிமுறைகளின் மூலம் ஒன்றிய அரசு திணிக்க நினைக்கும் தேசிய கல்விக் கொள்கை நடைமுறையால் மாநில கல்விப் புலத்தில் ஏற்படும் பாதகங்களை விளக்கி திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் ஒரு சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கம்
நேற்று (11.1.2025) மாலை பெரியார் திடல் – நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் மாண்பமை டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.கே. ராஜன், ஜஸ்டிஸ் து. அரிபரந்தாமன் ஆகியோர் யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் பற்றிய சட்ட விளைவுகளை, சட்டத்திற்கு புறம்பான நிலையை எடுத்துக் கூறினர். திருச்சி, பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தர் முனைவர் பெ. ஜெகதீசன் அவர்கள் கல்விப் புலத்தில் விளையப் போகும் பாதிப்புகளைபற்றி உரையாற்றினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் வரவேற்புரை ஆற்றினார். கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கி நன்றி கூறினார்.
கவிஞர் கலி. பூங்குன்றன்
கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தனது வரவேற்புரையில் தேசிய கல்விக் கொள்கையினை உயர் கல்வி நிறுவனங்களில் திணிக்க முனையும் ஒன்றிய அரசின் செயல் திட்டத்திற்கு வடிவம் கொடுக்கின்ற வகையில் யு.ஜி.சி. வரைவு வழிமுறைகள் உள்ளதாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
மேனாள் துணைவேந்தர் முனைவர் பெ. ஜெகதீசன்
மேனாள் துணைவேந்தர் முனைவர் பெ. ஜெகதீசன் அவர்கள் தனது கல்விப்புலன் அனுபவத்தினை ெகாண்டு உயர்கல்வி நிறுவனங்களின் யு.ஜி.சி. வரைவு விதி முறைகளினால் ஏற்படவுள்ள கல்விப் பின்னடைவுகள் குறித்துப் பேசினார்.
யு.ஜி.சி. என்பதே பல்கலைக் கழக நிதியாளுகை ஆணையம் என்ற பெயரில் உள்ளது. அதனுடைய பணி பல்கலைக் கழகங்களுக்கு மானியம் – நிதி வழங்கிடும் பணி வரம்பில் உள்ளதாக 1956இல் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. அப்பொழுது ‘கல்வி’ அதிகாரம் அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாநிலப் பட்டியலில் இருந்தது. ஆணையத்தின் பணி வெறும் பரிந்துரை மட்டுமே ஏற்றுக் கொள்ளவும் புறந்தள்ளவும் மாநிலங்களுக்கு உரிமை உண்டு. AITEC (All India Council for Technical Education) எனும் அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகம் பல்கலைக் கழக ெதாழில் நுட்பக் கல்வி தருவதில் சில மாற்றங்களைக் ெகாண்டு வர முடியும். யு.ஜி.சி. அமைப்பிற்கு பல்கலைக் கழக நிர்வாகத்தில் தலையிட எந்தவித உரிமையும் கிடையாது.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு பல்கலைக் கழகங்கள் நிர்வாகத்தில் தன்னாட்சி பெற்றவை. மாநில அரசுகூட அவ்வளவாக குறுக்கீடு செய்துவிட முடியாது. ஆனால் யு.ஜி.சி. அதனை செய்திட முனைகிறது. துணைவேந்தர் நியமனம் என்பது கார்ப்பரேட் நிறுவனங்களில் உள்ள தலைமை செயல் அதிகாரி Chief Executive Officer (CEO) போன்றதல்ல. கல்விப் புலனில் உள்ளவர்கள் அதனை புரிந்தவர்கள் இதுவரை துணை வேந்தர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் யு.ஜி.சி. வரைவு ஒரு விதிமுறை – கல்விப் புலன் சாராத முனைவர் பட்டம் பெறாத ஒருவர் துணை வேந்தராக நியமிக்கப்பட்டால் பல்கலைக் கழகங்களில் நடைபெறும் ஆய்வுகள் குறித்து துறை சார்ந்த பேராசிரியர்களுடன் கலந்து பேசி வழிகாட்டுதல் என்பது கேலிக் கூத்தாகி விடும்.
தேர்வுக் குழு அமைக்கும் உரிமை யாருக்கு?
துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடுதல் குழு (Search Committee) என்பதை அமைத்திட மாநில அரசுகள் உரிமை பெற்றவை. குழு உறுப்பினர்கள் விதிமுறைகளின்படி தெரிந்தெடுத்து சம்பிராதய ஒப்புதலுக்காக பல்கலைக் கழக வேந்தர் நிலையில் உள்ள ஆளுநர்களுக்கு அனுப்பப்படும். இதனை தலைகீழாக மற்றும் வகையில் மாநில அரசின் உரிமைகளைத் தட்டிப் பறித்து தேடுதல் குழுவை ஆளுநரே அமைத்துக் கொள்ளும் வகையில் யு.ஜி.சி.யின் வரைவு விதிமுறைகள் அமைந்துள்ளன. வேந்தர்கள் இருப்பது ஒரு அடையாள கவுரவமே. முழுவதும் மாநில அரசின் ஆலோசனையின் பேரில்தான் செயல்படும் அதிகாரம் கொண்டவர் ஆளுநர். இது அப்பட்டமான அரசமைப்புச் சட்ட மீறல் ஆகும். பல்கலைக் கழக நிர்வாகத்தைப் பொறுத்த அளவில் மாநில அரசு ஒரு செயல்படும் பங்குதாரர் (Working Partner) போன்றது. ஆளுநர் நிலையோ செயல்படா பங்குதாரர் (Sleeping Partner) போன்றது. இந்த அடிப்படை வேறுபாட்டை புரிந்து கொண்டும், புரியாத புதுகரடி விடுதல் போல யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் உள்ளன. மக்கள் விழிப்புடன் இருப்பது அரசு சரியாக செயல்படுகிறதா என்பதற்காக மட்டும் அல்ல; தவறானவற்றை செய்வதை வேறுபடுத்தி எதிர்த்து அதை நிறுத்துவதற்கும் ஆனதே.
இவ்வாறு முனைவர் பெ. ஜெகதீசன் தனது உரையில் குறிப்பிட்டார்.
டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.கே. ராஜன்
தனது உரை சட்ட வரையறைக்குள் மட்டும் இருக்கும்; இந்திய அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது என்பதுதான் முக்கியம் என தொடக்க நிலை விளக்கம் அளித்து உரையாற்றினார்.
அரசமைப்புச் சட்ட ஏழாவது அட்டவணை ஒன்றிய மாநில அரசுகளின் அதிகார அமைப்புகளைத் தெளிவுபடுத்துகிறது.
ஒன்றிய அதிகாரம் (Union List) என்பதில் 44 எண்ணிட்ட அதிகார வகை பல்கலைக் கழகங்கள் அல்லாத நிறுவனங் களைக் கட்டி அமைத்திட, ஒருங்கிணைத்திடும் அதிகாரத்தை மட்டுமே வழங்கியுள்ளது. மாநில அதிகார (State List) வரம்பில் வரைவு 32இன்படி அதன்படி பல்கலைக் கழகம் அமைத்திடும், ஒருங்கிணைந்து நடந்திடும் அதிகாரம் உள்ளது UGC சட்டம் உருவான பொழுது உள்ள முகப்புரை மற்றும் நோக்கமும் காரணமும் (Object & Reason) என்ற தலைப்பில் பல்கலைக் கழகங்களின் நிர்வாகத்தில் தலையிடுகின்ற வகையில் உள்ள தற்பொழுது வெளி வந்துள்ள வரை விதிமுறைகளை விதிக்கும் அதிகாரம் பல்கலைக் கழக நிதி ஆளுகை ஆணையத்திற்கு இல்லவே இல்லை; இதுதான் சட்டத்தின் நிலைப்பாடு. ஒன்றிய அதிகாரப் பட்டியல் 66இன் படி உயர் கல்வி நிலையங்களின் ஒருங்கிணைப்பு, தர நிர்ணயம் ஒன்றிய அரசு செய்திடலாம் எனக் குறிப்பிட்டுள்ளன. 66–இன்படி உள்ள ‘உயர்கல்வி நிறுவனங்கள் மீதுள்ள அதிகாரத்தை கோடிட்டு காட்டுபவர்களுக்கு ஒரு விளக்கம். சட்ட வியலில் Pith and Substance (உள்ளடக்கமும் பொருளும்) என்ற கோட்பாடு உள்ளது. விதிமுறைகள் ஒன்றை மற்றொன்று (Over lapping) அதிகார வரம்பினை எடுத்துக் கொண்டு விதிமுறைகள் அமைத்திட முடியாது Over lapping என்பதைவிட சட்ட காரணம் முதன்மையானது. சட்ட காரண அடிப்படையில்லாத யு.ஜி.சி. வரைவு விதிமுறை அரசியலமைப்புச் சட்டப்படி நிலைக்கத்தக்கதல்ல; கட்டமைப்பிற்கு புறம்பானது என்பதுதான் உண்மை நிலை.
இவ்வாறு நீதிபதி ஏ.கே. ராஜன் தமதுரையில் குறிப்பிட்டார்.
நீதிபதி து. ஹரிபரந்தாமன்
சென்னை நீதிமன்ற மேனாள் நீதிபதி து. ஹரிபரந்தாமன் தனதுஉரையில் குறிப்பிட்டதாவது:
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பல்கலைக் கழக வேந்தராக ஆளுநர் செயல்பட எந்த விதிமுைறயும் இல்லை. மாநில அரசு இயற்றும் பல்கலைக் கழகச் சட்டத்தில் ஆளுநர் வேந்தராக இருப்பார் எனக் கூறுகிறது. ஆளுநருக்கு மாநில அரசு அளித்திடும் வேந்தர் நிலை என்பது முழு அதிகாரம் படைத்துள்ளது அல்ல; மாநில அரசின் பரிந்துரையின் பேரில் செயல்பட வேண்டியவர் ஆனால், யு.ஜி.சி. வரைவு விதிமுறையான ஆளுநருக்கு அடையாளம் அளித்திடும் அதிகாரமிக்க மாநில அரசிற்கே துணைவேந்தர் தெரிவில் அதிகாரமில்லை என்பது சட்ட ரீதியான செயல்பாட்டை கேள்விக் குறியாக்கியது.
நெருக்கடி நிலை காலத்தில் நடந்தது
1975இல் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி காலத்தில் ‘கல்வி’ என்பது மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டது. நெருக்கடி கால மீறல்கள் (42 அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் படி) மீண்டும் சரி செய்யப்படவில்லை என்பதால் வந்த நிலை இது. ஒத்திசைவு பட்டியல் என்பது ஒன்றிய, மாநில அரசுடன் கலந்துபேசி, இசைந்து நடைமுறையாகும் அதிகாரம் ஆகும். ஆனால் இன்றைய ஒன்றிய அரசு, ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள அதிகாரத்தை மாநில அரசின் எந்த விவாத கலந்துரையாடலும் இல்லாமல் ஒன்றிய பட்டியல் போல தனக்கே அதிகாரம் உள்ளதாக கருதி செயல்படுகிறது.
ஒன்றிய அரசின் இந்த அரசமைப்புச் சட்ட விதிமுறைபற்றிய அறியாமை – அறிந்தும் புறம்பாக நடக்கும் – ஆதிக்க அதிகாரப் போக்கு சரியானது அல்ல.
மேலும் யு.ஜி.சி. சட்டமானது இந்த சட்டமீறலை 2010, 2013 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களின் மூலம் தொடர்ந்து செய்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சியே இன்றைய வரைவு விதிமுறைகள்.
துணைவேந்தரை கல்விப்புலனுக்கு வெளியிலிருந்து நியமித்துக் கொள்ளலாம் என்பது ஒன்றிய அரசின் உயர்நிலைப் பொறுப்புகளுக்கு (பதவி உயர்வின் மூலம் ஒதுக்கப்பட வேண்டியது) Lateral Entry முறை என்று நடைமுறையில் உள்ள வழிமுறையின் மற்றொரு வடிவமே. Lateral Entry (வெளியிலிருந்து நேரடி நியமனம்) முறைக்கு எதிர்ப்பு காட்டப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதைப்போல மக்கள் எதிர்ப்பின் மூலம்தான் துணைவேந்தர் பொறுப்பிற்கு வெளியிலிருந்து ஆட்கள் கொண்டு வருவதை நிறுத்தி வைக்க முடியும்.
நீண்ட கால சட்டப் போராட்டமும் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி து. ஹரிபரந்தாமன் குறிப்பிட்டார்.
தமிழர் தலைவரின் சிறப்புரை
கருத்தரங்கின் நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவுரை ஆற்றினார். ஆசிரியர் அவர்களின் பேச்சு சுருக்கம்:
பல்கலைக் கழக நிதி ஆளுகை ஆணையத்தின் பரிந்துரை என்பது ஒரு வழியுரை போன்றதே. கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கானதல்ல. (UGC’s Role is Advisory; not Mandatory) நெருக்கடி நிலை காலத்தில் மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவு பட்டியலுக்கு ‘கல்வி’ அதிகாரம் மாற்றப்பட்டது. அனைவரும் அறிந்ததே. மாற்றப்பட்ட ‘கல்வி’ அதிகாரத்தை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றிய விளக்கங்களை விடுத்து Better late than Never (எப்போதும் இல்லை என்பதைவிட தாமதப்படுத்தியாவது நடந்திட வேண்டும்) என்பதற்கு ஏற்ப பல தளங்களில் முன்னெடுப்புகள் முயற்சிக்கப்பட வேண்டும். ‘கல்வி’ அதிகாரம் மாநிலப் பட்டியலிலிருந்து மாற்றப்பட்டது 42ஆம்அரசமைப்புச் சட்டத் திருத்தின் மூலம் நடைபெற்றது. நெருக்கடி நிலை காலம் அது. புதிய ஆட்சி மய்யத்தில் ஏற்பட்ட பின்பு அந்த நிலையை மாற்றிட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவைக்கு சென்ற வேளையில் ஜனதா ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது.இப்பொழுது கைக் கொள்ளப்பட வேண்டியது Now or Never என்பதுதான் (இப்போதைக்கு மாற வேண்டும். எப்போதும் இல்லை என்ற நிலை வேண்டாம்)
ஒன்றிய அரசும், மாநில அரசும் கலந்து பேசி ஒத்திசைந்து செய்ய வேண்டியது – ஒன்றிய அதிகாரம் போல ஒன்றிய அரசும் தன்னிச்சையாக பல்கலைக் கழ விதிகளில் மாற்றம்.UGC வரைவு விதிமுறைகள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. திராவிடர் கழகம் ஒன்றிய அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து எதிர்த்துப் போராடி வருகிறது. UGC வரைவு விதிமுறைகள் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்படி ஒன்றிய அரசு செயல்பட வேண்டும் என்பதே நமது கோரிக்கை.
சட்டரீதியான கோரிக்கையை நிறைவேற்றவே நாம் போராட வேண்டியிருக்கிறது.சட்ட ரீதியாக மாநில உரிமை பறிப்பு நடைபெற்று வருகிறது. கல்விப்புலனில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக திகழும் தமிழ்நாட்டை மீண்டும் பழைய குருகுல காலத்திற்கு கொண்டு செல்ல தேசிய கல்விக் கொள்கை என்பதன் பெயரால் சங்பரிவாரங்கள், ஸநாதனிகள் செயல்படுகிறார்கள்.நமது ஒட்டு மொத்த போராட்டத்தின் மூலம் அவர்களின் செயல்கள் முறியடிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு தமதுரையில் தமிழர் தலைவர் குறிப்பிட்டார்.
இக்கருத்தரங்கு நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை, மேனாள் நீதிபதி பரஞ்சோதி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மேனாள் செயலாளர் மா. செல்வராஜ், பாவலர் பா. வீரமணி, மாநில கழக ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ. கோபால், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப. முத்தையன், செயலாளர் கோ. நாத்திகன், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், புரசை சு. அன்புச்செல்வன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு, செயலாளர் அ. விஜய் உத்தமன்ராஜ், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கி. தளபதிராஜ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ், புலவர் பா. வீரமணி, வி.சி. வில்சம், பெரியார் நூலக வாசகர் வட்டம் த.கு. திவாகரன், ஜனார்த்தனம், சோம. சுந்தரம், வழக்குரைஞர் துரை. அருண், நா. பார்த்திபன், சீர்காழி இராமண்ணா, சி. வெற்றிச்செல்வி, பசும்பொன், செ.பெ. தொண்டறம், பூவை. செல்வி உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டனர்.
தொகுப்பு: வீ.குமரேசன்