நீதித்துறையிலும் சமூகநீதி தேவை! தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

viduthalai
3 Min Read

தந்தை பெரியாரைப்பற்றி விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு! ஆனால், அவர்கள் பைத்தியக்காரர்களாக இருக்கக் கூடாது! பைத்தியங்களுக்கு நமது பதில் தேவையில்லை, வைத்தியம்தான் இப்போது தேவை!

சென்னை, ஜன.10 தந்தை பெரியாரைப்பற்றி விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால், அவர்கள் பைத்தியக்காரர்களாக இருக்கக் கூடாது. வெறிபிடித்த நாய்களாகி குரைக்கின்றவர்களுக்கு, பதில் சொல்ல முடியாது. பைத்தியங்களுக்குப் பதில் தேவையில்லை, வைத்தியம்தான் இப்போது அவர்களுக்குத் தேவை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
நேற்று (9.1.2025) நீதித்துறையில் நீதிபதி நியமனங்களில் சமூகநீதியைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று சென்னை ராஜரத்தினம் மைதானத்தின் அருகே திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அவரது பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்: சமூகநீதிக் காவலர் தந்தை பெரியாரைப்பற்றி அவதூறு கருத்துகளை சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அதுபற்றி உங்கள் கருத்து?
பெரியாரைப்பற்றி விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு!
தமிழர் தலைவர்: தந்தை பெரியாரைப்பற்றி விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால், அவர்கள் பைத்தியக்காரர்களாக இருக்கக் கூடாது. வெறிபிடித்த நாய்களாகி குரைக்கின்றவர்களுக்கு, பதில் சொல்ல முடியாது.
செய்தியாளர்: சீமான் சொன்னதற்கு, அண்ணாமலை ஆதரவு தெரிவித்திருக்கிறாரே?
பைத்தியங்களுக்குப் பதில் தேவையில்லை, வைத்தியம்தான் தேவை!
தமிழர் தலைவர்: ஆமாம், ஒரு பைத்தியம் இன்னொரு பைத்தியத்தோடு சேருவது என்பது இயல்புதானே!
பைத்தியக்கார மருத்துவமனையில், பைத்தியங்கள் எல்லாம் ஒன்றாகத்தானே இருக்கும்.
ஒரு பைத்தியம் என்று இல்லாமல், நாட்டில் மேலும் சில பைத்தியங்கள் இருக்கின்றன. ஆகவே, சிகிச்சைகள் அதிகமாக வேண்டும். மனநல மருத்துவ மனைகளை இன்னும் கொஞ்சம் தாராளமாகக் கட்டி பெரிதாக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
பைத்தியங்களுக்கு நமது பதில் தேவையில்லை, வைத்தியம்தான் தேவை!
– இவ்வாறு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

செய்தியாளர்: நீதித் துறையிலும் சமூகநீதி வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்களே, அதனுடைய தேவை இப்பொழுது என்ன?
அனைத்துத் தரப்பினருக்கும்
சம வாய்ப்பு – அரசமைப்புச் சட்டத்தில் உள்ள உரிமை!
தமிழர் தலைவர்: ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் 12 பார்ப்பன உயர்ஜாதி நீதிபதிகள் இருக்கிறார்கள். அனைத்துத் தரப்பினருக்கும் சம வாய்ப்பு – போதிய அளவு (adquate Representation)என்பது அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டு இருக்கின்ற உரிமை.
அந்த adquate Representation என்பது மற்ற சமுதாய மக்களுக்கு இல்லாத நிலையில், கிட்டாத நிலையில், அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக, தீர்ப்புகளுக்கு விரோதமாக, இன்றைக்கு ஒரு சமுதாயத்தைச் சார்ந்த உயர்ஜாதிப் பார்ப்பனர்களுக்கு மட்டும் – ஏற்கெனவே 12 இடங்கள். இப்போது மேலும் 4 அல்லது 5 இடங்கள் அவர்களுக்கே கொடுக்கவேண்டும் என்று நினைப்பது, மற்றவர்களுக்கு வரவேண்டிய வாய்ப்பை அவர்கள் பறித்துக் கொள்ளக்கூடியதாகும். இந்தச் சூழ்ச்சியைத் தகர்க்கவேண்டும்.
இது ‘‘எல்லோருக்கும் சமூகநீதி” என்பதற்கும், ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்ற கொள்கைக்கும் விரோதமானதாக இருக்கிறது.
மதுரையிலும், சென்னையிலும்…
ஆகவே, அந்த ‘‘கிடைக்காத’’ அனைவரும் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதற்காகத்தான் மதுரையில் இன்று காலையிலும், சென்னையில் மாலையிலும் முதற்கட்டமாக போராட்டம் நடந்திருக்கிறது. வழக்குரைஞர்கள், மற்றவர்கள் எல்லோரும் இதனை வலியுறுத்திச் சொல்கிறார்கள்.
சமூகநீதி என்பது பிச்சையல்ல, உரிமை!
சமூகநீதி என்பது பிச்சையல்ல, பிறப்புரிமை! அரசமைப்புச் சட்டப்படி அளிக்கப்பட்டுள்ள உரிமை! உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள உரிமை!
அந்த உரிமைகளுக்காகத்தான், கோரிக்கை ஆர்ப்பாட்டமாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கண்டன ஆர்ப்பாட்டம்கூட இல்லை. கோரிக்கை, ஆர்ப்பாட்டமாக நடந்திருக்கிறது.
ஏனென்றால், பரிந்துரையை இப்போதுதான் கொலிஜியத்திற்குச் செய்திருக்கிறார்கள். கொலிஜியம் என்பதில்கூட, உரியவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கவேண்டும்.
புதிதாக நேற்று வந்தவர்கள் எல்லாவற்றையும் தெரிந்துகொள்வார்கள் என்றால், அனுபவம் இல்லாதவர்களாகவோ அல்லது உயர்ஜாதி மனப்பான்மை உள்ளவர்களாகவோ இருக்கக் கூடாது.
சமூகநீதிக்கு விரோதமானதாகும்!
வழக்குரைஞர்கள், அவர்களது அமைப்புகள்கூட போய்ப் பார்த்த நேரத்தில் உரிய மரியாதையோடு வரவேற்று, அவர்கள் சொல்லுகின்ற கருத்தைக் கூட கேட்காதது, சமூகநீதிக்கு விரோதமானதாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *