நாடாளுமன்றத்தில் பாதுகாப்புக்குழு அறிக்கை
புதுடில்லி, டிச.22– முப்படைகளின் மேனாள் தளபதி விபின் ராவத் பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டர் விபக்குள்ளான நிகழ்வு குறித்து மக்களவையில் பாதுகாப்புத்துறை நிலைக்குழு 19.12.2024 அன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கடந்த 2021 டிசம்பர் 8-ஆம் தேதி கோவை வந்த முப்படைத் தளபதி பிபின் ராவத், குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவத் தளத்தில் நடைபெறவிருந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார்.
ஹெலிகாப்டர் விபத்து
எம்அய்-17 வி5 ரக விமானப் படையின் ஹெலிகாப்டரில் விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 12 அதிகாரிகள் பயணம் செய்தனர்.
பகல் 1 மணியளவில் வெலிங்டனில் தரையிறங்க சில நிமிடங்களுக்கு முன்னதாக, மலையின் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விபின் ராவத், அவரது மனைவி உள்பட 11 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். ஹெலிகாப்டரை இயக்கிய குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்ற நிலையில், ஒரு வாரத்துக்கு பிறகு அவரும் உயிரிழந்தார்.
நிலைக்குழு அறிக்கை
இந்த நிகழ்வு நடந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மக்களவையில் பாதுகாப்புத் துறை நிலைக்குழு 19.12.2024 அன்று அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அதில், 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் மட்டும் மொத்தமாக இந்திய விமானப் படைக்கு சொந்தமான 34 விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானது. 2021 முதல் 2022 வரையிலான ஓராண்டில் பிபின் ராவத் ஹெலிகாப்டர் உள்பட 9 விபத்துகள் நடந்துள்ளன. இதில், விபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் மனிதத் தவறே (ஏர் க்ரூ) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனிதத் தவறே காரணம்
முன்னதாக, விபத்து நடந்த காலகட்டத்தில் நடைபெற்ற முதல்கட்ட விசாரணையில், திடீரென சூழ்ந்த மேகக் கூட்டங்களால் எதிர்பாராத விதமாக விபத்து நேர்ந்திருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி, காக்பிட் குரல் பதிவுகள் உள்ளிட்டவை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு மனிதத் தவறே காரணம் என்று பாதுகாப்பு நிலைக்குழு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளின்
இலவச சுகாதார பரிசோதனை முகாம்கள்
மக்களவையில் தி.மு.க. உறுப்பினர் கேள்வி
புதுடில்லி, டிச.22- நாட்டில் தனியாா் மருத்துவமனைகள் மூலம் இலவச சுகாதார பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுவது குறித்து ஒன்றிய அரசு அறிந்துள்ளதா என்று மக்களவையில் கோயம்புத்தூா் தொகுதி திமுக உறுப்பினா் கணபதி ராஜ்குமாா் கேள்வி எழுப்பினாா்.
இது தொடா்பாக கணபதி ராஜ்குமாா், ‘தனியாா் மருத்துவமனைகள் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்களை நடத்துவதை ஒன்றிய அரசு அறிந்திருக்கிறதா? அத்தகைய முகாம்களை நடத்துவதற்கு ஏதேனும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?, இதுபோன்ற இலவச மருத்துவ பரிசோதனை முகாம்களின் போது தனியாா் மருத்துவமனைகள் நோயாளிகள் மீது தவறான நோயறிதலின் கீழ் மக்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றது உண்மையா?
நோயாளிகளின் ஆதாா் அட்டை, தொடா்பு எண் போன்ற தனிப்பட்ட விவரங்களைத் தவறாகப் பயன்படுத்தலாம் என்பதால் அவற்றை சேகரிக்க வேண்டாம் என அந்த மருத்துவமனைகளுக்கு ஒன்றிய அரசு ஏதேனும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருந்தாா். இதற்கு ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணை அமைச்சா் அனுப்ரியா படேல் மக்களவையில் எழுத்துபூா்வமாக 20.12.2024 அன்று அளித்த பதில்:
அரசமைப்புச்சட்ட விதிகளின்படி, ‘சுகாதாரம்’ என்பது மாநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. எனவே, தனியாா் மருத்துவமனைகள் நடத்தும் இலவச சுகாதார பரிசோதனை முகாம்களை கவனத்தில் கொள்வதும், அத்தகைய முகாம்களை நடத்த அனுமதி வழங்குவதும், அவற்றின் அதிகார எல்லைக்குள் அதற்கான அறிவுரைகள்அறிவிப்புகளை வெளியிடுவதும் சம்பந்தப்பட்ட மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் முதன்மைப் பொறுப்பாகும். இது தொடா்பான விவரங்கள் ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் பராமரிக்கப்படுவதில்லை என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.
இன்று முதல் சென்னையில்
போக்குவரத்து மாற்றம்
காவல்துறை அறிவிப்பு
சென்னை,டிச.22- கோட்டூர்புரம் ஓ.எம்.ஆர். சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் இன்று (22.12.2024) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை கோட்டூர்புரம் மத்திய கைலாஷ் சந்திப்பு ஓ.எம்.ஆர் சாலையில் பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், மத்திய கைலாஷ் சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சோதனை ஓட்டம் அடிப்படையில் 22.12.2024 முதல் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் அமுல்படுத்தப்படும்.
* அடையாறில் இருந்து கிண்டி நோக்கி வரும் வாகனங்கள் மத்திய கைலாஷ் சந்திப்பில் OMR சாலை நோக்கி திருப்பி விடப்படும். அந்த வாகனங்கள் 400 மீட்டர் தூரம் சென்று தரமணி சி.பி.டி. (CPT) பாலிடெக்னிக் கல்லுாரியின் முன்புறம் ‘U’ திருப்பம் அனுமதிக்கப்பட்டு, மத்திய கைலாஷ் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடைய அனுமதிக்கப்படும்.
* கிண்டியில் இருந்து அடையாறு மற்றும் ஓ.எம்.ஆர் நோக்கி வரும் வாகனங்கள் தற்போது போலவே எந்த மாற்றும் இல்லாமல் செல்லலாம்.
* ஓ.எம்.ஆர்-ல் இருந்து கிண்டி நோக்கி வரும் மாநகர பேருந்துகள் மத்திய கைலாஷ் கோயிலின் பின்புறத்தில் நியமிக்கப்பட்ட தனிப்பாதையில் பயணிகளை இறக்கிவிட அனுமதிக்கப்படும்.
இந்த போக்குவரத்து மாற்றமானது மத்திய கைலாஷ் சந்திப்பில் காத்திருப்பு நேரத்தை குறைப்பதோடு, சீரான போக்குவரத்தையும் ஏற்படுத்த வழிவகை செய்யும். பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.