ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் தகவல்
புதுடில்லி, டிச.17 2022-2023 மற்றும் 2023-2024 ஆகிய நிதியாண்டுகளில் மட்டும் பொதுத் துறை வங்கிகள் ரூ.2.33 லட்சம் கோடி வாராக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. பொதுத்துறை வங்கி கடன் தள்ளுபடி தொடர்பான கேள்விக்கு மக்களவையில் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் 2022-2023ஆம் நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகள் ரூ.1,18,949 கோடியை வாராகடனாக தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023-2024ஆம் நிதியாண்டில் ரூ.1,14,622 கோடி வாராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்டது. 2023-2024ஆம் நிதியாண்டில் மட்டும் அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.18,317 கோடியை வாராக்கடனாக தள்ளுபடி செய்துள்ளது.
இருப்பினும் கடன் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
9-12ஆம் வகுப்பு பாடப் புத்தகங்கள்
விலை குறைப்பு : NCERT
9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் விலையை NCERT அமைப்பு குறைத்துள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் பாடப் புத்தகங்கள் விலையை 20விழுக்காடு வரை குறைக்கப்படும் என்று தெரிவித்த அந்த அமைப்புத் தலைவர் தினேஷ் பிரசாத் சக்லானி, இதுபோல விலை குறைக்கப்படுவது இதுவே முதல்முறை எனவும் குறிப்பிட்டார். 1-8 வகுப்பு பாட புத்தகங்கள் விலை தலா ரூ.65 ஆகும். CBSC பாடத்திட்ட மாணவர்களுக்கு இது மிகவும் பயனளிக்கும்.
எல்.அய்.சி.யில் உரிமை கோரப்படாமல் கிடக்கும் ரூ.881 கோடி
எல்அய்.சி.யில் உரிமை கோரப்படாமல் ரூ.881 கோடி பணம் கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவையில் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 2023-2024ஆம் நிதியாண்டில் 3,72,282 கணக்குகளில் காலம் முடிந்தபிறகும் அதில் இருக்கும் ரூ.880.93 கோடி பணம் உரிமை கோரப்படாமல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 2022-2023இல் ரூ.815 கோடி உரிமை கோரப் படாமல் இருப்பதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.