தமிழ் நாட்டில் முதல் “வைக்கம் வீரர் படிப்பகம்”

Viduthalai
2 Min Read

இந்தியாவில் முதல் மனித உரிமைப் போராட்டம் கேரளாவில் உள்ள வைக்கத்தில், தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் நடை பெற்றது. அப் போராட்டத்தில் தந்தை பெரியார் கடும் தண்டனை பெற்று கொடும் சிறையில் அடைக்கப் பட்டார். போராட்டம் தடை படாமல், தந்தை பெரியார் அவர்களின் வாழ்விணையர் அன்னை நாகம்மையார் அவர்களும், தங்கை கண்ணம்மாள் அவர்களும் தலைமை வகித்து போராட்டத்தை முன்னின்று , முன்பை விட வீறு கொண்டு நடத்தினார்கள். இறுதியில் போராட்டம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் வீரர் எனப் புகழ் பெற்றார்.

அத்தைகைய புரட்சி போராட்டத்தின் வெற்றியின் அடையாளமாக 01.02.1929 அன்று சிவகங்கை மாவட்டத்தில், திருப்பத்தூரில், தென்மாபட்டு என்ற பகுதியில், தமிழ் நாட்டிலேயே முதல் “வைக்கம் வீரர்” படிப்பகம் என்ற அறிவுசார் படிப்பகத்தை, சுயமரியாதைச் சுடரொளிகள் முருகையா ஆசிரியர், மற்றும் கடவுள் இல்லை நா.பள்ளி கொண்டான் ஆகிய இரு பெருமக்களால் தொடங்கப்பட்டது.
வைக்கம் வீரர் படிப்பகம் மறு சீரமைப்பு செய்து, புதிய படிப்பகத் திறப்பு விழா 07.10.2007 அன்று தமிழ் நாடு அரசின் அன்றைய இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சர் தற்போதைய கூட்டுறவுத் துறை அமைச்சர்கே ஆர். பெரிய கருப்பன் அவர்களின் தலைமையில், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் மறு சீரமைப்பு செய்த புதிய வைக்கம் வீரர் படிப்பகத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இன்றும் வைக்கம் வீரர் படிப்பகம் சிறப்புடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
இப் படிப்பகத்தின் தலைவராக தென்மா பட்டு தி.மு.க. 17ஆவது வட்ட கிளை கழகத் தலைவர் முத்து வயிறு, செயலாளராக அந்தோணி ஜெயராஜ், பொருளாளராக செழியன் ஆகியோர் செயல்பட்டு வருகிறார்கள். வைக்கம் வீரர் படிப்பகத்தில் நம் இனமான நாளிதழ் விடுதலை கம்பீரமாக மேசை மீது இருந்ததைப் பார்த்து அக மகிழ்வுற்றோம். அதே போல் முரசொலி நாளிதழ் மற்றும் அனைத்து நாளிதழ்கள், புத்தகங்கள் நிறைய இருந்தன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த வைக்கம் வீரர் படிப்பகத்தை சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத்தின் தலைவராகிய நான், மாவட்ட செயலாளர் பெரு.இராசாராம், மாவட்டத் துணைத் தலைவர் திருக்கோட்டியூர் தனபாலன் ஆகியோர் சென்று பார்வையிட்டு மிக மகிழ்வு அடைந்தோம்.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு பெரு விழா நடைபெறும் வைக்கத்திற்கு, அவ் விழாவில் கலந்து கொள்ள, வைக்கம் போராட்ட வெற்றி விழாவின் அடையாளமாக தொடங்கப்பட்ட வைக்கம் வீரர் படிப்பகத்தில் இருந்து சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் புறப்பட்டு உள்ளார்கள் என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்,
வழக்குரைஞர் ச. இன்பலாதன், மாவட்டக் காப்பாளர்
இரா.புகழேந்தி, மாவட்டத் தலைவர்
பெரு.இராசாராம், மாவட்டச் செயலாளர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *