எம் தமிழர் தலைவர் ஆசிரியர் இன்னும் நூறாண்டு வாழ்க!

2 Min Read

கண்மூடிக் கிடந்தநம் இத்தமிழ் நாட்டில்
அருளொளி பாய்ச்சிய அண்ணல் – திருத்திய நம்
தந்தை பெரியார் தம்கொள்கை வென்றி மிக
எந்தையர் வீரமணி ஏற்று!

பகுத்தறிவுத் தந்தை பகலவன் நம்மின்
வகுத்த பெரியார் வழியில் -தகுகொள்கை
மாறா உறுதி மருளப் பகைமை
பேறார்ந்த வீரமணி வீறு!

பத்தகவை முதல் பைந்தமிழ் ஊற்றாகி
வித்து வளர்பசுமை வீச்சாகி – ஒத்துரிமைக்
கொள்கை விளைவித்துக் கொள்முதல் வீரமணி
வள்ளல் பெருந்தன்மை வாழ்த்து!

தடம்மாறா மல்பெரியார் தக்கதடம் பற்றி
இடம்தாரா தேபகைமை எற்றிக் – குடத்தேன்போல்
தோழமைத் தி.க.வின் தொண்டமர் தலைவர்களும்
வாழவைத்த வீரமணி வாழ்த்து!

சுயமரி யாதைத் சுயநல்மில் பாதை
வியப்பார்ந்த தொண்ணூற்றின் மேலும் – நயப்பார்ந்த
ஓட்டமும் நன்னடையும் ஓர்ந்தே உழைதமிழ்
நாட்டுவீர மாமணி மன்.

மண்ணுரிமை பெண்ணுரிமை மாற்றமதை கூரும்
எண்ணச் செயல்செய் இனஉரிமை வண்ண
மொழிஉரிமை மேன்மேல் வளர்உரிமை காண்டார்
விழிநகர்த்த வீரமணி வேந்து!

அன்னை மணியம்மை ஆறல் பெரியாரில்
தன்னை இணைத்த தகைத்தவத்தை – முன்னோக்கித்
தானெடுத்துச் சென்று தளராத் துணிவோடே
வானிடிக்கும் வெற்றி வணங்கு!

தமிழினக் காப்புக் கடமை அரணாய்
நமின்நாட்டை நாளும்வஞ்சி க்கும்- உமிப் பகைமை
ஒன்றியத்தை வெல்லும் உறுத முதல் வர்க்கே
நன்றுதுணை வீரமணி நம்பு.

இன்றுவரை என்றென்றும் எப்பதவி யும் வேண்டா
நன்றுதமி ழர்க்கே உழைக்கும் – வென்றித்
திராவிட எம்கழகம் தேர்ந்ததிசை எல்லாம்
திராவிடர் வெல்லவை சான்று!

தந்தை கனவெல்லாம் தந்த நனவாக
விந்தை புரியும் வீரமணி – சிந்தனைப்
பேருழைப்புக் கீடேது பேசரியா வெல்லுழைப்பு
யாருழைப்பும் ஈடோ? நவில்?

கல்விக் கழகங்கள் கண்டு சமுதாயம்
எல்லா விதத்திலும் ஏற்றமுறச் – சொல்செயல்
ஒன்றாக வாழும் உயர்ந்தநம் ஆசிரியர்
இன்னும்ஓர் நூறாண்டும் இருப்பு.

ஆத்திகம் பேசி அடாதசெயல் செய்வாரும்
நாத்திக உண்மை நன்னடையால் – ஈத்துவக்கும்
வேண்டுதல் வேண்டாமை வேண்டும் பகுத்தறிவாளர்
மாண்புதமி ழர்தலைவர் வாழ்த்து!

கி.வீரமணி, வாழ்த்து

ஆக்கம்:
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்,
உலக அமைப்பாளர்,
பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *