புதுடில்லி, நவ.15- பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்து வது பற்றி நாடாளுமன்ற நிலைக்குழு 22ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறது.
இந்தியாவில் ஆண்களின் குறைந்த பட்ச திருமண வயது 21 ஆகவும், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும் உள்ளது. அதற்கு குறைவான வயதில் திருமணம் செய்து கொள்வது குழந்தை திருமணமாக கருதி, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கிடையே, கடந்த 2006ஆம் ஆண்டின் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து, கடந்த 2021ஆம் ஆண்டு குழந்தை திருமண தடுப்பு திருத்த மசோதா உருவாக்கப் பட்டது. திருமண வயதை ஆண், பெண் இருபாலாருக்கும் 21ஆக ஒரேமாதிரி நிர் ணயிக்க அம்மசோதா வகை செய்கிறது.
மசோதா காலாவதி
அது, 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பின் னர்,நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப் பட்டது. நிலைக்குழுவின் பத விக்காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், ஆய்வு முடியாத நிலையில், இந்த ஆண்டு 17ஆவது மக்களவை பதவிக்காலம் முடிவடைந்ததால், மசோதா காலாவதி ஆனது. இருப்பினும், பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த் துவது பற்றி கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், விளையாட்டு ஆகியவை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை நடத்த உள்ளது. இக்குழு காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திக்விஜய்சிங் தலைமையில் செயல்படுகிறது.
22ஆம் தேதி ஆலோசனை
வருகிற 22ஆம் தேதி, நாடாளு மன்ற நிலைக்குழுவின் கூட்டம் நடக்கிறது. அதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம் பாட்டு அமைச்சகசெயலாளர், இளைஞர் குரல் இயக்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் குழுவின் முன்பு ஆஜர் ஆகிறார்கள். பெண்களின் திருமண வயதை உயர்த்துவது பற்றி ஆலோசிப்பதுடன், தேசிய பெண்கள் ஆணையம், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது. மசோதா காலாவதி ஆன போதிலும், பெண்கள் திருமண வயது பற்றி விவாதிக்க தடையில்லை என்று குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
புதிய கல்வி கொள்கை
புதிய கல்வி கொள்கை பற்றியும் கூட்டத்தில் பேசப்படுகிறது. பள்ளிகல்வித்துறை செயலாளர், பள்ளி ஆசிரியர் அமைப்புகள் ஆகியோர் பள்ளிக்கல்வியில் புதிய கல்வி கொள்கை ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி தெரிவிக்கிறார்கள். சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் பற்றியும், என்.சி.இ.ஆர். டி., கேந்திரிய வித்யாலயா சங்க தன், நவோதயா வித்யாலயா சமிதி ஆகிய அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.