சென்னை, நவ.3 ரூ.80 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் ‘வள்ளூவர் கோட்டம்’ வரும் பொங்கல் தினத்திற்கு முன் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உலக பொதுமறையான திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவருக்கு கோட்டம் அமைக்கும் வகையில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் திராவிட கலை மற்றும் பல்லவர் கட்டடக்கலையுடன் கட்ட திட்டமிடப்பட்டு, அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞரால் அடிக்கல் நாட்டப்பட்டது. 1976ஆம் ஆண்டு ஏப்.15ஆம் தேதி திறக்கப்பட்டது.
துரிதமாக நடைபெற்று வருகின்றன
வள்ளுவர் கோட்டம், கட்டப்பட்டு 48 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முந்தைய ஆட்சியாளர்களால் சரியாக பராமரிப்பின்றி இருந்ததால் முற்றிலுமாக சேதமடைந்தது. இதனையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர், கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது ‘வள்ளுவர் கோட்டம்’ புனரமைப்பதற்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் 275 கட்டடட வல்லுநர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை கொண்டு பொதுப்பணி துறை மூலமாக துரிதமாக நடைபெற்று வருகின்றன.
குறள் மண்டபம்
குறிப்பாக, கோட்டத்தின் தரைத் தளத்தின் கீழ் பகுதியில் 1,400 பேர் அமரக்கூடிய வகையில் குளிரூட்டப் பட்ட ஆடிட்டோரியம், 1,330 செய் யுள்களை உள்ளடக்கிய குறள் மண்டபம், திருக்குறள் வசனங்களை காட்சிப்படுத்தும் ஓவியம், கோட்டம் வாயிலின் முன்புறத்தில் இசை நீரூற்று, 1000 புத்தகங்கள் அடங்கிய நூலகம் உள்ளிட்டவை புதிதாக வடிவமைத்து, புனரமைத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆய்வு மய்யம்
பல அடுக்கு வசதியுடன் கூடிய வாகன நிறுத்தம், திருக்குறள் ஆய்வு மய்யம் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுவருகின்றன. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கு நடைபாதை, தேரின் உச்சிக்கு செல்ல சாய்வு தளம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வர்ணம் பூசும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அனைத்து கட்ட பணிகளும் விரைவில் நிறைவடைந்துவிடும். எனவே, அடுத்தாண்டு பொங்கல் நாள் முன்பாகவே வள்ளுவர் கோட்டத்தை திறக்க பணிகளை துரிதமாக செய்து வருகிறோம் என்றார்.