மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆவேசம்!
புதுடில்லி, செப்.22 மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சுக்கு பாஜகவினர் கடுமையாக எதிர்வினை ஆற்றிய நிலையில், தனது கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் விளக்கம் அளித்துள்ளார் ராகுல். உண்மையை சகித்துக் கொள்ள முடியாததால் என்னை மவுனமாக்க பாஜக துடிக்கிறது எனத் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்கா சென்று இருந்தார். அப்போது வாசிங்டன் நகரத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே கலந்துரையாடினார். அப்போது மதச் சுதந்திரம் தொடர்பான கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துப் பேசுகையில், ‘இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு சீக்கியர் தலைப்பாகை அணிந்து குருத்வாராவுக்கு செல்ல முடியுமா? அதேபோல் காடா அணிந்து குருத்வாராவுக்கு செல்ல முடியுமா? என்பது இந்தியாவில் கேள்வியாக இருக்கிறது’ எனத் தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு இந்தியாவில் பெரும் விவாதமானது. ராகுல்காந்தி இந்தியாவின் ஒற்றுமை மற்றும் சீக்கிய உணர்வுகளையும் புண் படுத்தும் வகையில் பேசியதாக பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந் தியாவில் சீக்கியர்களுக்கு மதச் சுதந்திரம் இல்லை என்பதைப் போன்ற தோற்றத்தை வெளி நாட்டு மண்ணில் ராகுல் காந்தி ஏற்படுத்த முயன்றுள்ளார் என பாஜகவினர் விமர்சித்து வரு கின்றனர்.
பாஜகவினர், ராகுல் காந்தியை மிரட்டும் வகையிலும் கருத்துகளை தெரிவித்தனர். பாஜக பிரமுகர் தர்வீந்தர் சிங், “ராகுல் காந்தி, இதுபோன்ற செயல்களில் இருந்து விலகி இருங்கள், இல்லையெனில் வரும் காலத்தில் உங்கள் பாட்டிக்கு ஏற்பட்ட கதியை நீங்களும் சந்திக்க நேரிடும்” எனக் கூறியிருந்தார். இந்நிலையில் ராகுல் காந்தி இந்த சர்ச்சை குறித்து தற்போது மவுனம் கலைத் துள்ளார்.
ராகுல் காந்தி எக்ஸ் தளத் தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்காவில் நான் பேசிய கருத்து தொடர்பாக பாஜக வினர் பொய்களைப் பரப்பி வருகின்றனர். இந்தியாவிலும் வெளி நாட்டிலும் உள்ள ஒவ்வொரு சீக்கிய சகோதரர் களையும் பார்த்துக் கேட்கிறேன் நான் கூறியதில் ஏதேனும் தவறு இருக்கிறதா? ஒவ்வொரு சீக்கியரும், ஒவ்வொரு இந்தியனும் அச்சமின்றி தங்களுடைய மதத்தை சுதந்திரமாக பின்பற்றும் நாடாக இந்தியா இருக்க வேண்டாமா?
வழக்கம்போல் பாஜக பொய்களை மட்டுமே பேசுகிறது. உண்மையை சகித்துக் கொள்ள முடியாததால் என்னை மவுன மாக்க பாஜக துடிக்கிறது. ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை, சமத்துவம், அன்பு ஆகிய இந்தியாவை வரையறுக்கும் மதிப்புகளுக்காக நான் எப்போதும் குரல் கொடுப்பேன்.” எனத் தெரி வித்துள்ளார்.