அமெரிக்காவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு. ராகுல்காந்தி ஆற்றிய உரையும், மாணவர்கள் மத்தியில், கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்களும் பிஜேபி மற்றும் சங்பரிவார்களின் வயிற்றைப் பெரும் அளவில் கலக்கி இருப்பதை அறிய முடிகிறது.
ராகுல் பேச்சைக் குறித்து விமர்சனப் பார்வையில் இல்லாமல் வாய்க்கு வந்தவாறு வாரிக் கொட்டுவதன் மூலம் பிஜேபி கூட்டத்தின் கலக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
(1) நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் பிஜேபி நடந்து கொண்ட முறைகேடுகளை வெளிப்படுத்தியுள்ளார் ராகுல்.
குறிப்பிட்ட மாநிலங்களில் தேர்தல் நடக்கும் தேதிகளை தங்கள் வசதிக்காக நிர்ணயம் செய்யவில்லையா?
(2) பெண்களை வீட்டுக்குள் முடக்கப் பார்க்கும் பிஜேபியின் அணுகுமுறையைப் பற்றியும் ராகுல் பேசியுள்ளார்.
அதில் என்ன குற்றங் கண்டனர்? நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு சட்டத்தை நிறைவேற்றி செயல்படுத்துவதில் ஏன் தயக்கம் – முட்டுக்கட்டை ஆளும் பிஜேபியின் பக்கம் தானே இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை சராசரியாக 12 விழுக்காடு தானே? பாரத மாதா பற்றிப் பேசும் பா.ஜ.க.வினர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன்பாகவத் பெண்களைப் பற்றிச் சொன்ன கருத்து என்ன?
‘‘பெண்கள் அதிகம் படித்து அதிகம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் தங்கள் கணவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க மறுக்கிறார்கள்; அத்தகையவர்களை மண விலக்குச் செய்ய வேண்டும்’’ என்று கூறவில்லையா?
பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கப் பார்க்கிறார்கள் என்று ராகுல் கூறியதில் குற்றம் கண்டது என்ன?
(3) சமூகநீதிக்கு (இடஒதுக்கீட்டுக்கு) எதிராக ராகுல்காந்தி அமெரிக்காவில் பேசி விட்டாராம்.
அண்டப் புளுகு, ஆகாயப் புளுகு, திரிபுவாதம் என்பார்களே – இவை எல்லாம் இந்தப் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களிடம் இராப் பிச்சை, பகல் பிச்சை வாங்க வேண்டும்.
மாணவர்கள் மத்தியில் அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு ராகுல் சொன்ன பதில் என்பது சமூகநீதியின் உச்சம்.
ஆனால் பெரும்பாலும் நூலார்கள் அல்லவா அப்படியே திரிபுவாதம் செய்கிறார்கள் – ஒன்றிய அமைச்சர் என்ற அதிகாரத்தில் உள்ளவர்களே அந்த வேலையைச் செய்வது வெட்கக் கேட்டின் பெருக்கல் தொகையே!
ராகுல் காந்தியிடம் மாணவர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த தரவுகள் அடங்கிய பதில் இதோ!
78 அரசு செயலாளர்கள் இந்திய அரசை நடத்திச் செல்கின்றனர். பொருளாதாரம் சம்பந்தமான முடிவுகளை அவர்கள் தான் எடுக்கின்றனர்.
இத்தகைய 78 அதிகாரிகளில் ஒரே ஒருவர் பழங்குடி சமூகத்தவர், மூவர் தலித்துகள், மூவர் பிற்படுத்தப் பட்டவர்கள் ஆவர்.
90 விழுக்காடு உள்ள மக்களுக்கு அரசு அதிகாரத்தில் பங்கு ஒரே ஒரு விழுக்காடு மட்டுமே!
இந்த இடஒதுக்கீடுக்கு எதிரான முறை எப்பொழுது முடிவுக்கு வரும் என்றால், எல்லாப் பிரிவினருக்குமான சமத்துவ நிலை வரும் கட்டத்தில் தான் என்று மிகத் தெளிவாக துல்லியமாக, அப்பழுக்கின்றி ராகுல் காந்தி வெளிப்படுத்திய உன்னதமான கருத்தை – தலை கீழாகப் புரட்டி மாற்றி, இடஒதுக்கீட்டுக்கு எதிராக ராகுல்காந்தி அமெரிக்காவில் பேசியுள்ளார் என்று ஒன்றிய அமைச்சர் அளவில் பேசுகிறார்கள் என்றால், இவர்கள் எதைச் செய்யத்தான் துணிய மாட்டார்கள்?
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத்துகிறது. ஆனால் பிஜேபி ஆட்சி மாற்றுக் கருத்துக் கொண்டுள்ளது. கணக்கெடுப்பை நடத்த முன்வர மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் வைத்துள்ளார்.
(4) இன்னொரு குற்றச்சாட்டையும் ராகுல்மீது ஏவுகிறார்கள். ஒரு வெளிநாட்டுக்குச் சென்று இந்தியா பற்றி குறை சொல்லலாமா என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு.
அறிவியல் வளர்ச்சி உலகத்தை ஒரு சுண்டு விரலின் கீழ் கொண்டு வந்து விட்டது. உலகின் ஒரு சிற்றூர் மூலையில் வெளியிடும் கருத்தும், பேச்சும் உலகின் அனைத்துப் பரப்புகளிலும் சென்றடைந்து விடுகின்றது.
இதில் எங்குப் பேசினால் என்ன? சரி, அவர்கள் கூறும் விவாதத்துக்கே வருவோம்!
வெளிநாடு செல்லும் பிரதமர் நரேந்திரமோடி பேசாத பேச்சா?
நாங்கள் ஆட்சிக்கு வருமுன்னர் இந்தியா என்றால் வெட்கப்படத்தக்க வகையில் தான் இருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது என்று பிரதமர் மோடி பேசவில்லையா?
அமெரிக்காவின் ஸ்டேட்டன் தீவில் பிரதமர் ஏ.பி. வாஜ்பேயி பேசியது எல்லாம் மறந்து போயிற்றா?
அமெரிக்கக் குடியரசு தலைவர் ஒபாமா இந்தியா வந்த போது, டில்லியில் பிரதமர் மோடியை அருகில் வைத்துக் கொண்டு ‘மதச்சார்பற்ற கொள்கையோடு இந்தியா இருந்தவரை சிறப்பாக இருந்தது – அது நீடிக்கப்பட வேண்டும்!’ என்று தலையில் பலத்த குட்டு வைக்க வில்லையா?
நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி ஆட்சியும், அவர் கட்சியும், சங்பரிவார்களும் பேசும் பாசிசப் பேச்சுகளும், மத வன்முறை வெறியாட்டங்களும்தான் இந்தியாவை உலகப் பார்வையிலும் உள்நாட்டுப் பார்வையிலும் தலைக் குப்புறத் தள்ளுகிறது – அதனை சுட்டிக் காட்டி எச்சரித்து, ஆக்க ரீதியாகப் பேசியதுதான் ராகுலின் ஆழமான கருத்தாகும்!