முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து
சென்னை, ஆக. 21 “இண்டியா கூட்டணியின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக நேரடி (லேட்டரல் என்ட்ரி) நியமனங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றுள்ளது. இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி. பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாக்க நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்,” என்று தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் தனது ‘எக்ஸ்‘ சமூக வலைதளப் பக்கத்தில், “இண்டியா கூட்டணியின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக நேரடி (லேட்டரல் என்ட்ரி) நியமனங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றுள்ளது. இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பல்வேறு வகையில், இடஒதுக்கீடு முறையை பலவீனப்படுத்த முயற்சித்து வருவதால், நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இடஒதுக்கீட்டில் தன்னிச்சையான 50 சதவீதம் என்ற உச்ச வரம்பு உடைக்கப்பட வேண்டும். அதேநேரம், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாக்க நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்,” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.