லட்சத்தீவு, ஆக. 17- இந்தியாவில் 350க்கும் மேற்பட்ட வகையான பாம்புகள் காணப்படுகின்றன, அவை ஆண்டுதோறும் அதிகரித்தும் வருவதாக தரவுகள் கூறுகின்றன.
இந்தியாவில் காணப் படும் பாம்புகளில் 17 விழுக்காடு மட்டுமே விஷத் தன்மை கொண்டவை. அதிக பாம்பு இனங்கள் காணப்படும் மாநிலம் கேரளா ஆகும். ஆனால் நாட்டில் பாம்புகளே இல்லாத மாநிலம் உள்ளது தெரியுமா?
லட்சத்தீவு ஒரு யூனியன் பிரதேசம் மற்றும் 36 சிறிய தீவுகளால் ஆனது. லட்சத்தீவின் மொத்த மக்கள் தொகை சுமார் 64,000 மட்டுமே. மொத்தம் 32 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள லட்சத்தீவு மக்கள் தொகையில் 96 சதவிகிதம் முஸ்லிம்கள் ஆவர். மற்ற 4 சதவிகிதம் இந்து, பவுத்த மற்றும் பிற மதத்தினரும் இங்கு வாழ்கின்றனர்.
லட்சத்தீவில் 36 தீவுகள் இருந்தாலும், அவற்றில் 10 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். இதில் கவரட்டி, அகத்தி, அமினி, காட்மட், கிலா டன், செட்லாட், பித்ரா, ஆண்டோ, கல்பானி மற்றும் மினிகாய் தீவு ஆகியவை அடங்கும். சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், இவற்றில் பல தீவுகளில் 100-க்கும் குறைவான மக்களே வாழ்கின்றனர்.
இன்னொரு விடயம் லட்சத்தீவுக்கே உரியது. நாட்டிலேயே பாம்புகள் இல்லாத ஒரே மாநிலம் இதுதான். லட்சத்தீவின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின்படி, லட்சத்தீவு பாம்புகள் இல்லாத மாநிலமாகும். இங்கு நாய்கள் கூட காணப்படுவதில்லையாம். லட்சத்தீவு நிர்வாகம் பாம்பு மற்றும் நாய்கள் இல்லாத தீவாக தங்கள் தீவை வைத்துக்கொள்ளத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதே வரிசையில், லட்சத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், நாய்களை உடன் அழைத்து வர அனுமதிக் கப்படுவதில்லை. காக்கை போன்ற பறவைகள் இங்கு ஏராளமாக காணப்படுகின்றன, அதுவும் பிட்டி தீவில், சரணாலயமும் உள்ளது. மற்றொரு விடயமும் லட்சத்தீவுகளை மற்றவற்றிலிருந்து வேறு படுத்துகிறது. சிரேனியா அல்லது ‘கடல் பசு’ இந்த தீவில் காணப்படுகிறது, இது அழிந்து வரும் இன மாகவும் உள்ளது.