இந்திய ரிசர்வ் வங்கி கணித்திருந்ததைவிட நாட்டின் சில்லரை பணவீக்கம் (Retail inflation) கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாகக் குறைந்துள்ளதாக விவரங்கள் வெளிவந்துள்ளன.
உண்மை நிலை என்ன?
கடந்த 12.7.2024 அன்று தேசிய புள்ளிவிவர அலுவலகம் (National Statistical Office) சில்லரை பணவீக்கம் குறைந்துள்ளதாக விவரங்களை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் இந்த புள்ளி விவரப்படி, ஜூலை 2024 மாதத்திற்கான சில்லரை பணவீக்க விகிதம் 3.5 விழுக்காடு ஆகக் குறைந்துள்ளது. ஜூன் 2024 – இல் நிலவிய சில்லரை பணவீக்க விகிதம் 5.08 விழுக்காடு ஆகும். கடந்த ஆண்டு சில்லரை பணவீக்க விகிதம் ஜூலை 2023-இல் 7.44 விழுக்காடு என்ற அளவில் இருந்தது.
பணவீக்க விகிதம் குறைவதற்கு விலைவாசிகள் குறைந்து வருவது ஒரு காரணமாகும். நடப்பில் சில்லரை விலைவாசிகள் குறையாத சூழலில் பணவீக்கம் எப்படி குறைந்தது என்ற எண்ணம் தோன்றும். பணவீக்கம் குறைந்துள்ளது என்பதால் நாட்டின் பொருளாதார நிலை நல்லபடியாக உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. கடந்த மாதத்தில் நிலவிய சில்லரை பணவீக்கக் குறைவு, விலைவாசி குறைவால் ஏற்பட்டதல்ல; மாறாக கணக்கீட்டு முறையால் காட்டப்பட்டதே என்பதை பொருளாதார நிபுணர்கள் கூறிவருகிறார்கள்.
அது என்ன கணக்கீட்டு முறை? அதன் விளக்கம் என்ன?
இந்த கணக்கீட்டு முறையினை ஆங்கிலத்தில் base effect என்று கூறுவார்கள்,
எடுத்துக்காட்டாக மூன்று தொடர் காலங்களில் நிலவிடும் நிலையினை சுட்டிக் காட்டலாம்.
காலம் 1, காலம் 2, காலம் 3 – இந்த மூன்று காலங்களில் நிலவிடும் புள்ளி விவரம் முறையே 100, 150, 200 என உள்ளதாகக் கருதுவோம். காலம் 1-ல் நிலவிய 100, காலம் 2-இல் 150 ஆக உயருகிறது. இதன் விகிதம் 100க்கு 50 உயர்வு என்பதால் இதன் விகிதம் 50 விழுக்காடு. அடுத்த காலம் 2-இல் உள்ள 150, காலம் 3-இல் 200 ஆக உயருகிறது. முதல் கட்ட நிலையில் உயர்ந்த 50 என்ற அளவில்தான் (100 லிருந்து 150 ஆக) இரண்டாம் கட்ட நிலையிலும் 50 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் இரண்டாம் கட்ட நிலை விகிதத்தை கணக்கீடு செய்யும்பொழுது 150 என்ற நிலையிலிருந்து 50 ஆக உயர்ந்துள்ளதால் இதன் விகிதம் 50/150 x 100 என்ற கணக்கீட்டால் 33.3 விழுக்காடு என மாறுகிறது. புள்ளி விவரநிலை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் 50 என்ற ஒரே அளவில் உயர்ந்திருந்தாலும் அடிப்படைக் கணக்கீட்டில் அந்த விகிதங்கள் 50 விழுக்காடு, அடுத்து 33.3 விழுக்காடு என மாறியுள்ளது.
இப்படி கணக்கீட்டு முறையினால் குறைந்தது போல வெளிவந்துள்ள சில்லரை பணவீக்கம் காட்டப்பட்டுள்ளது.
இந்த சில்லரை பணவீக்கக் குறைவின் நிலையான தன்மை அய்யப்பாட்டிற்கு உரியது என்பதை உறுதி செய்திடும் வகையில் ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள இரு மாதத்திற்கு ஒரு முறை வெளி வரும் பணலியல் திட்ட அறிக்கையின் (Money Policy Report) குறிப்புகளை ஒப்பிட்டுக் கூறலாம்.
பண வீக்கக் குறைவு உண்மையிலேயே நிலைத்த தன்மையானது என்று ரிசர்வ் வங்கி கருதி இருந்தால் வட்டி விகிதக் குறைப்பை வங்கி அறிவித்திருக்கும். அப்படி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் குறைந்துள்ள சில்லரை பணவீக்கம் (கணக்கீட்டு முறையிலானது) நிலைத்து நிற்குமா என தெரியாது.
ஒரு சாதகமான நிலவரம் நிலவுகிறது. குறிப்பாக பருவ மழை காரணமாக வேளாண் துறை உற்பத்தி, அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. பருவமழையால் நீர்நிலைகள் நிரம்பி, முதல் பருவ (கரீப்) பயிர் சாகுபடிப் பரப்பு அதிகரித்துள்ளது. அதனையொட்டி இரண்டாவது பருவத்திலும் (ரபி) நீர் பிடிப்பு உள்ள நிலையில் சாகுபடிப் பரப்பு அதிகமாகும். இதனால் வேளாண் விளை பொருள்களின் உற்பத்தி அதிகமாகி விவசாயப் பொருட்களின் விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. வேளாண் விலைவாசி குறையும் என்பதால், விவசாயிகளுக்கு அவர்தம் உற்பத்திப் பொருள்களுக்கு உரிய விலை அளிக்கின்ற வகையில் ஒன்றிய அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
அப்பொழுதுதான் வேளாண் விளைபொருள் உற்பத்தியாளரும், நுகர்வோர்களும், பொதுமக்களும் நல்ல பொருளாதார நிலையில் இருக்க முடியும்.
கணக்கீட்டு முறையில் சில்லரைப் பணவீக்கத்தை குறைத்துக் காட்டியுள்ள ஒன்றிய அரசானது நிலையான சில்லரை பணவீக்க குறைவிற்கு வழி ஏற்படுத்துவார்களா என்பதுதான் நாட்டு நலனில் அக்கறை உள்ளோர் கேட்பது! பணவீக்கக் குறைவை நிலைப்படுத்துமா இன்றைய ஒன்றிய அரசு?