மேட்டூர், ஆக. 8- மேட்டூர் அணையின் 16 மதகுகளில் இருந்து உபரி நீர் திறப்பு நேற்று (7.8.2024) காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. நீர் மின் நிலையங்கள் மூலம் பாசனத்திற்காக தொடர்ந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
கருநாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணை, 30ஆம் தேதி, தன் முழு கொள்ளளவான, 120 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணைக்கு வரும் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
6.8.2024 அன்று இரவு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 22,200 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் மூலம் வினாடிக்கு 17,500 கன அடி வீதம், 16 மதகுகள் மூலம் வினாடிக்கு 4,500 கன அடி வீதம் மொத்தம் 22,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் நேற்று (7.8.2024) காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 10 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் 16 மதகுகளில் இருந்து உபரி நீர் திறப்பு கடந்த 8 நாட்களுக்கு பிறகு நிறுத்தப்பட்டது.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையின் நீர்மின் நிலையங்கள் மூலம் 21,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதையடுத்து 21,500 கனஅடியில் இருந்து 16,000 கனஅடியாகவும், பின்னர் 16 ஆயிரம் கனஅடியில் இருந்து 10 ஆயிரம் கனஅடியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.