மோடி அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: மல்லிகார்ஜூன கார்கே

viduthalai
2 Min Read

புதுடில்லி, ஜூலை 28- மோடி அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கோரிக்கை வைத்துள்ளார்.

இந்திய ராணுவத்தில் அக்னிபத் என்கிற 4 ஆண்டு பணிபுரியும் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தில் 17 வயது முதல் 21 வயதுடைய இளைஞர்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரந்தர ஊதியத்தில் பணியில் சேரலாம். 4 ஆண்டுகளுக்கு பிறகு தகுதியின் அடிப்படையில் ஆட் களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். ராணுவத்தை ஒரு சேவையாக பார்க்கும் தங்களின் லட்சியக் கனவுகளை கலைக்கும் விதமாக இந்த திட்டம் இருப்பதாக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யும்படியும் பல்வேறு தரப்பு களிடையே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

அதில், கார்கில் விஜய் திவாஸ் நாளன்று தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவது போன்ற சமயங்களில் மோடி அற்ப அரசியல் செய்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னால் இருந்த பிரதமர்கள் யாரும் இப்படி செய்ததில்லை.

ராணுவத்தின் பரிந்துரையின் பேரில் தனது அரசு அக்னிபாத் திட்டத்தை செயல் படுத்தியதாக மோடி கூறுகிறார். இது அப்பட்டமான பொய், நமது வீரம் மிக்க பாதுகாப்பு படைகளுக்கு மன்னிக்க முடியாத அவமானம் என கார்கே தெரிவித்தார்.

மேனாள் ராணுவ தளபதி நரவனே, அக்னிபாத் திட்டத்தில் 75% பேர் நிரந்தர பணிக்காக எடுத்துக்கொள்ளப்படுவர் என கூறினார். 25% பேர் 4 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்படுவார்கள் என்றும் மேனாள் ராணுவத் தளபதி நரவனே பதிவு செய்துள்ளார்.

ஆனால் மோடி அரசு இதற்கு நேர்மாறாக செயல்பட்டு, முப்படை களுக்கும் அக்னிபாத் திட்டத்தை கட்டாயமாகியுள்ளது. மேலும், ‘அக்னிபத் திட்டம்’ ராணுவத்திற்கும், கடற்படை மற்றும் விமானப்படைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 6 மாத பயிற்சி மூலம் தொழில்முறை வீரர் களை உருவாக்குகிறோமா? என்றும் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

ராணுவத்தில் சேர்வது தேச பக்திக்காகவே தவிர, சம்பாதிப்பதற்காக அல்ல என்றும் கார்கே கருத்து தெரி வித்தார். அக்னிவீரர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம், கல்வி உதவித் தொகை எதுவும் கிடைக்கவில்லை.

இதுவரை 15 அக்னிவீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர், இதை பிரதமர் தெரிந்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் அவர்களின் தியாகத்தையாவது பிரதமர் மோடி மதிக்க வேண்டும். அக்னிபாத் திட்டத்தின் மீது இளைஞர்கள் மத்தியில் கடும் கோபமும் எதிர்ப்பும் எழுந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *