புதுடில்லி, ஜூலை 25- இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி 40-க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு தொடுத்தவர்களில் சிலர் இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தனர். வேறு சிலர், தேர்வை ரத்து செய்யக்கூடாது; மறு தேர்வு நடத்த தேசிய தேர்வு முகமைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி இருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, 23.7.2024 அன்று தனது தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பு விவரம்:
இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்தன. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை தொடர்பானது என்பதால், இதில் உறுதியான மற்றும் இறுதி முடிவை வழங்குவதற்கான அவசரத் தேவை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தின் இறுதி முடிவுகள் தற்போதைய கட்டத்தில் பதிவு செய்யப்படுகின்றன.
நீதிமன்றம் எடுத்துள்ள இந்த முடிவுக்கு சில காரணங்கள் உள்ளன. நீட் இளநிலை தேர்வு வினாத்தாள்கள் ஹசாரிபாக் மற்றும் பாட்னாவில் கசிந்துள்ளன. இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தொடர்பாக சிபிஅய் நடத்திய விசாரணையில் வினாத்தாள் கசிவால் 155 மாணவர்கள் பலனடைந்துள்ளதாக அது அறிக்கை தாக்கல் செய்துள்ளது. எனினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் சிபிஅய் கூறி இருக்கிறது.
நீட் வினாத்தாள் பரவலாக கசியவில்லை என்ற சென்னை அய்அய்டி-ன் அறிக்கையை அரசு தாக்கல் செய்துள்ளது. தேசிய தேர்வு முகமை வழங்கிய தரவுகளை நீதிமன்றம் சுயமாக ஆய்வு செய்துள்ளது. பதிவேட்டில் உள்ள தகவல்களின் அடிப்படையில், தற்போதைய நிலையில், தேர்வின் முடிவு மோசமாக உள்ளது மற்றும் தேர்வின் உண்மைத் தன்மைக்கு திட்டமிட்ட ரீதியில் மீறல் நடந்துள்ளது என்பதைக் காட்டுவதற்கான அறிகுறிகள் இல்லை.
மறு தேர்வு நடத்த உத்தரவிட்டால் அது 23 லட்சம் மாணவர்களுக்கு தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், மருத்துவப் படிப்புகளின் சேர்க்கை அட்டவணையில் சீர்குலைவை ஏற்படுத்தும் என்றும், எதிர்காலத்தில் தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர்கள் கிடைப்பதில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அரசு கூறியது.
மேற்கண்ட காரணங்களுக்காக, இளநிலை நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய உத்தரவிடுவது, நியாயமாக இருக்காது என்று நாங்கள் கருதுகிறோம். இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஊக்கமுடன் இருந்தால் வெற்றி பெறலாம்!
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் அறிவுரை!
சென்னை, ஜூலை 25- “‘அசைவிலா ஊக்கம் உடையான் உழை’ என்ற குறளுக்கேற்ப, தளர்வு இலலாத ஊக்கம் கொண்ட மாணவர்கள் எல்லாப் போட்டிகளிலும் நிச்சயம் வெற்றி பெறலாம்” என்று சிறீராம் இலக்கியக் கழகம் நடத்திய திருக்குறள் விழாவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர ந.அருள் பேசினார். அவர் கூறியதாவது:
இக்கழகம் மாநிலம் முழுவதும் திருக்குறள் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக அண்மையில் சென்னை, அண்ணா நகரில் உள்ள சி.எஸ்.அய். ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போட்டிகளை நடத்தியது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பேசிய தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் முனைவர் ந.அருள், “தமிழ்நாடு அரசு ஆறு தலைவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் அரசுப் பள்ளி மட்டும் அல்லாமல், தனியார் பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளும் வாய்ப்பை தற்போது அரசு உருவாக்கி இருக்கிறது. தமிழ் சார்ந்த போட்டிகளில் மாணவர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். முயற்சி உடைய மாணவர்களுக்கு பரிசு தேடி வரும். – இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, இந்நிகழ்ச்சியில் சி.எஸ்.அய். ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் விமலா ஏஞ்சலினா வாழ்த்துரை வழங்கினார். சிறீராம் சிட்ஸ் நிறுவனத்தின் உதவிப் போது மேலாளர் ரவி வரவேற்புரை ஆறறினார்.