ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை நாற்காலியை காப்பாற்றும் முயற்சி ராகுல் காந்தி விமர்சனம்

viduthalai
2 Min Read

புதுடில்லி, ஜூலை 25- “பாஜகவின் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளும் வகையில் ஒன்றிய பாஜக அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025 நிதியாண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையை 23.7.2024 அன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்துக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதனைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிதிநிலை அறிக்கை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “பாஜகவின் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளும் (குர்சி பச்சாவோ) நிதிநிலை அறிக்கை இது.

மற்ற மாநிலங்களின் பணத்தில் பாஜக தனது கூட்டணி மாநிலங்களுக்கு வெற்று வாக்குறுதியை கொடுத்துள்ளது. சாதாரண குடிமக்களுக்கு நிதிநிலை அறிக்கையில் எந்த நிவாரணமும் இல்லை. மாறாக, கூட்டாளிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய நிதிநிலை அறிக்கைகள் நகலெடுத்து ஒட்டப்பட்டுள்ளன” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

முன்னதாக, மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், “தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படித்துள்ளார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 30இல் சொல்லப்பட்டுள்ள வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை (ELI) திட்டம் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நிதியமைச்சர் ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி.
காங்கிரஸ் அறிக்கையின் பக்கம் 11இல் குறிப்பிடப்பட்டுள்ள உதவித்தொகையுடன் கூடிய இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டமும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸின் பல ஆண்டுகால கோரிக்கையான ‘ஏஞ்சல் வரி’ ரத்து, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பக்கம் 31இல் சொல்லப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையும் தற்போது நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

ஒன்றிய அரசு ஏஞ்சல் வரியை ரத்து செய்தது மகிழ்ச்சியை தருகிறது. இதேபோல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள வேறு சில யோசனைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நகலெடுத்திருக்கலாம். விரைவில் அதனை பட்டியலிடுகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *