தமிழ்நாடு புறக்கணிப்பு இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூலை 24 டில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

2019இல் ஒன்றிய நிதி அமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன், தொடர்ச்சியாக தனது 7ஆவது பட்ஜெட்டை நேற்று (23.7.2024) தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு உள்பட காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த சிறப்பு நிதியும் ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக பாஜக கூட்டணி கட்சிகளான ஆந்திரா மற்றும் பீகாருக்கு மட்டுமே அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்களுக்கு பாரபட்சம் காட்டும் விதமாக ‘ஒருதலைபட்சமான நிதிநிலை அறிக்கை’ எனவும் பல கட்சிகள் விமர்சித்துள்ளன.

இந்நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு நிதிநிலை அறிக்கையில் எந்த திட்டமும் அறிவிக்கப்படாததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், இ.கம்யூ., மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக இதில் பங்கேற்றுள்ளனர். சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட இந்தியா கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் தலைவர் கார்கே, திமுக சார்பில் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். ‘‘தமிழ்நாடும் இல்லை, திருக்குறளும் இல்லை” என்ற பதாகையுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘‘தமிழ்நாட்டிற்கு நிதி எங்கே?” என கேள்வி எழுப்பி திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *