58 ஆண்டுகளாக இருந்த தடையை நீக்கியது, ஒன்றிய பா.ஜ.க. கூட்டணி அரசு! அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.சில் இணையலாமாம்! நிர்வாகத்தைக் காவிமயமாக்கும் சூழ்ச்சி – ஆபத்து!

Viduthalai
4 Min Read

தடையை நீக்கிய ஒன்றிய அரசின் செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!

புதுடில்லி, ஜூலை 23- ‘அரசு ஊழியர்கள்
ஆர்.எஸ்.எஸ்.சில் இணையலாம்’ என, இதுவரை இருந்து வந்த தடையை நீக்கிய ஒன்றிய அரசின் செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அண்மையில் 3 ஆவது முறையாக ஆட்சி அமைத்த மோடி தலைமையிலான ஒன்றிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேருவதற்கு இருந்த தடையை நீக்கியுள்ளது குறித்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

அதன் விவரம் வருமாறு:
அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்வதற்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்தத் தடை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்து செயல்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை ஒன்றிய அரசு நீக்கியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருந்த நாதுராம் கோட்சே, காந்தியாரை சுட்டு படுகொலை செய்ததாலும், தொடர் வன்முறைக் காரணங்களாலும் 1948 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், “நாடு இப்போது பெற்றிருக்கும் சுதந்திரத்தைச் சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ். ஒரு சட்டவிரோத அமைப்பு” எனக் குறிப்பிடப்பட்டு, அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேலால் அதற்குத் தடை அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்வதற்கும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் 58 ஆண்டு காலமாக இருந்து வந்த தடையை மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தற்போது நீக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு காந்தியார் சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக முதல் முறையாக தீவிர வலதுசாரி ஹிந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு சர்தார் வல்லபாய் படேல் தடை விதித்தார்.

சில காலங்களுக்குப் பிறகு நன்னடத்தை பேரில் அந்தத் தடை நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1966 ஆம் ஆண்டுவாக்கில் பசுக்கொலைகளுக்கு எதிராகப் போராடு கிறோம் என்று வெகுஜன ஆதரவை
ஆர்.எஸ்.எஸ். அமைப்புத் திரட்டி போராட்டம் நடத்தத் துவங்கியது. இதன் உச்சமாக நாடாளுமன்றத்தில் பசுக்கொலைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடந்தது.
இதனைத்தொடர்ந்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரவும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதித்தார். இடையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினோடு நெருங்கிய தொடர்புடைய பா.ஜ.க. ஆட்சி அமைந்த போதும், பிரதமர் வாஜ்பேயி
ஆர்.எஸ்.எஸ். மீதான இந்த தடையை நீக்காத நிலையில், தற்போது 3 ஆவது முறையாக பிரதமர் ஆகியுள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு, இந்தத் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின், மோடி மீது ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அதிருப்தியில் இருப்பது அண்மைக்காலமாக பொது வெளியில் அவர்களின் பேச்சில் இருந்து தெரிகிறது. இந்த விரிசலை சரி செய்யவே
ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு இந்த உபகாரத்தை மோடி செய்து கொடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதற்கிடையில் தடையை நீக்கியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ஜூலை 18, 1948 அன்று ஹிந்து மகாசபா தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு சர்தார் வல்லபாய் படேல் எழுதிய கடிதத்தில், “இந்து மகாசபாவின் தீவிரப் பிரிவினர் காந்தியைக் கொல்ல சதியில் ஈடுபட்டுள்ளனர் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆர்.எஸ்.எஸ்.சின் செயல்பாடுகள் அரசு மற்றும் அரசின் செயல்பாடுகளுக்கு தெளிவான அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றன. தடை விதிக்கப்பட்ட போதிலும் அந்த நடவடிக்கைகள் ஓயவில்லை என்பதை அறிக்கைகள் காட்டுகின்றன ’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தன் ‘எக்ஸ்’ பக்கத்தில், ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இப்பொழுது அனுமதி கொடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது. சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்றத்தைத் திறந்து, அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ்.சுக்கு அனுப்பி வைக்கும் வேலையை துவக்கியிருக்கிற மோடி அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தன் ‘எக்ஸ்’ பக்கத்தில்,
“1948 பிப்ரவரியில் காந்தியார் படுகொலை செய்யப்பட்ட பிறகு, சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தடை செய்தார். இதன்பின், தடை நீக்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை நாக்பூரின் ஆர்.எஸ்.எஸ். தலைமை இடத்தில் மூவர்ணக் கொடி ஏற்றப்படவில்லை.

1966 இல் அதிகாரப்பூர்வமாக ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது.
ஜூன் 4, 2024 ஆம் ஆண்டிற்குப் (தேர்தல் முடிவு) பிறகு, மனித நேயமற்ற பிரதமருக்கும், ஆர்.எஸ்.எஸ்-க்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. ஜூலை 9, 2024 அன்று, அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது கூட நடைமுறையில் இருந்த, அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்-சில் இணைவதற்கான 58 ஆண்டு தடை, தற்போது நீக்கப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டு, ஜூலை 9 அன்று பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) பிறப்பித்த உத்தரவைப் பகிர்ந்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *