புதுடில்லி, ஜூலை 12 தமிழ் நாட்டிற்கு காவிரியில் விநாடிக்கு 11,500 கனஅடி வீதம் நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீரை பிலிகுண்டுலுவில் விடுவிப்பதை கருநாடக மாநிலம் உறுதி செய்ய வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழு (சி.டபிள்யு.ஆர்.சி.) நேற்று (11.7.2024) பரிந்துரை செய்தது.
காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் 99-ஆவது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று காணொலி வழியாக நடைபெற்றது.
தமிழ்நாடு தரப்பில் இந்தக் கூட்டத்தில், நடுவர் மன்றம் மற் றும் உச்சநீதிமன்ற உத்த ரவின்படி தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரை வழங்கும்படி கோரப்பட்டது. இதற்கு கருநாடகம் பதிலளிக்கையில், தங்களது 4 அணைகளில் தற்போது மொத்தம் 58.66 டிஎம்சி தண்ணீர் உள்ளது. ஜூன், ஜூலை மாதங்களில் கருநா டகத்தின் 4 அணைகளுக்கு நீர்வரத்தில் 28.7 டிஎம்சி குறைவாக உள்ளது. தற்போது பருவமழை பெய்து வருகிறது. ஜூலை 25- ஆம் தேதிக்கு பின்னர் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் விடுவிப்பதை முடிவு செய்ய வேண்டும் எனக் கூறியது.
ஆனால், 4 மாநிலங்களின் விரிவான விவாதங்களுக்குப் பிறகு சி.டபிள்யு.ஆர்.சி. தலைவர் வினீத் குப்தா, கருநாடகம் தனது அணைகளிலிருந்து ஜூலை 12-ஆம் தேதியிலிருந்து ஜூலை 31-ஆம் தேதி வரை விநாடிக்கு 11,500 கனஅடி வீதம் நாள் ஒன்றுக்கு ஒரு டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு பிலிகுண்டுலுவில் விடுவிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என பரிந்துரை செய்தார். காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட பரிந்துரை குறித்து கருநாடக நீர்ப்பாசனத் துறையைக் கவனிக்கும் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பெங்களூரில் நேற்று கூறியதாவது:
எதிர்பார்த்த அளவு தண்ணீர் அணைகளில் சேமிக்கப்படவில்லை. இதுகுறித்து தற்போதைக்கு எவ்வித கருத்தும் கூற விரும்பவில்லை. ஆனால், தமிழ்நாட்டிற்கு திறந்துவிடும் அளவுக்கு கருநாடகத்தில் போதுமான அளவு தண்ணீர் இல்லை. கருநாடகத்தில் உள்ள அணைகள், ஏரிகள் இன்னும் முழுமையாக நிரம்பவில்லை.