புதுடில்லி, ஜூன் 29- வினாத்தாள் கசிவு முறைகேடு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட ‘யுஜிசி நெட்’ தேர்வு மற்றும் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக ஒத்திவைக்கப்பட்ட ‘சிஎஸ்அய்ஆர்-யுஜிசி நெட்’ தேர்வுக்கான தேதிகளை தேசிய தேர்வு முகமை நேற்று (28.6.2024) அறிவித்தது.
தேசிய தேர்வு முகமை நடத்தும் ‘நீட்’ மற்றும் ‘யுஜிசி நெட்’ ஆகிய அகில இந்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, நாடு முழுவதும் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அடுத்ததாக நடைபெறவிருந்த சிஎஸ்அய்ஆர்-யுஜிசி நெட் தேர்வும் முன்னெச்சரிக்கையாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மறுதேர்வுக்கான தேதிகளை தேசிய தேர்வு முகமை அறிவித்தது. முன்னதாக, எழுத்து வடிவத்தில் நடைபெற்ற யுஜிசி நெட் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம், 21-ஆம் தேதி முதல் செப்டம்பர் 4-ஆம் தேதி வரை கணினி அடிப்படையிலான தேர்வாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், சிஎஸ்அய்ஆர்-யுஜிசி நெட் தேர்வு வரும் ஜூலை 25-ஆம் தேதிமுதல் 27-ஆம் தேதி வரையும், நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தில் சேருவதற்கான ‘என்சிஇடி’ நுழைவுத் தேர்வு ஜூலை 10-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 23-ஆம் தேதி நடைபெற இருந்து, முந்தைய நாள் இரவு திடீரென ஒத்திவைக்கப்பட்ட ‘நீட் முதுநிலை’ தேர்வுக்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
நிற்காமல் தொடரும்
ரயில் விபத்துகள்
ரயில்வே அமைச்சரின் கவனம் எங்கே?
சொரனூரு, ஜூன் 29– கேரளத்தில் விரைவு ரயிலின் என்ஜின் மட்டும் திடீரென தனியாக கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இதில் பயணிகள் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
எர்ணாகுளம்-டாடா நகர் எக்ஸ்பிரஸ் திருச்சூர் மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது, ரயிலின் என்ஜின் பகுதி மட்டும் பிற பெட்டிகளில் இருந்து திடீரென துண்டிக்கப்பட்டு தனியாக ஓடத் தொடங்கியது. பெட்டிகள் துண்டிக்கப்பட்ட இடத்தில் இருந்து சிறிது தொலைவு நகர்ந்து சென்று நின்று விட்டன. காலை 9.30 மணியளவில் இந்த நிகழ்வு நடந்தது. துண்டிப்பு நிகழ்ந்தபோது ஒரு நிலையத்தில் இருந்து புறப்பட்டு ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்ததால் பயணிகள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
இதையடுத்து, ரயில் என்ஜின் உடனடியாக நிறுத்தப்பட்டது. நிகழ்விடத்துக்கு ரயில்வே பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக சென்று ஆய்வு செய்தனர். என்ஜின் பின்னோக்கி கொண்டு வரப்பட்டு பெட்டிகள் மீண்டும் இணைக்கப்பட்டன. பிறகு ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது. இதனால் அந்தத் தடத்தில் சில மணி நேரத்துக்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. என்ஜின் தனியாக கழன்றதற்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர்.