அயோத்தி, ஜூன் 23- அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கின் போது தலைமை அர்ச்சகராக செயல்பட்ட பண்டிட் லட்சுமிகாந்த் தீட்சித் (வயது 86) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டமைக்கப்பட்டு, 2024 ஜனவரியில் குடமுழுக்கு நடந்தது.
அப்போது, பூஜைகள் செய்த 121 அர்ச்சகர்களுக்கு தலைமை ஏற்றவர் பண்டிட் லட்சுமிகாந்த் தீட்சித். வாரணாசியின் மூத்த அர்ச்சகர்களில் ஒருவரான இவர், மஹாராட்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தினர் பல தலைமுறைகளாக வாரணாசியில் வசித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக லட்சுமிகாந்த் தீட்சித், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று (22.6.2024) காலை அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்த நிலையில், சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ராமன் கோயில் குடமுழுக்குக்குப் பிறகு பக்தர்கள் கூட்டம் வருகைக் குறைவு என்று கூறியதற்காக சங்பரிவார்களால் அர்ச்சிக்கப்பட்டவர். நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை; கடும் வெயிலின் காரணமாகக் கூட்டம் குறைந்தது என்றுதான் கூறினேன் என்று சமாதானம் கூறியவர் இவர்.