புதுடில்லி, டிச. 18- நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 13ஆம் தேதி பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த 2 பேர் வண்ண புகைக் குண்டுகளை வீசினர்.
அதேநேரத்தில் நாடாளுமன் றத்துக்கு வெளியேயும் ஒரு பெண் உள்பட 2 பேர் வண்ணப் புகை குண்டுகளை வீசி அதிர்ச்சியை கிளப்பினர். ‘சர்வாதிகாரத்தை அனுமதிக்கமாட்டோம்’ என்பன போன்ற முழக்கங்களை எழுப்பிய அவர்கள் 4 பேரும் கைது செய்யப் பட்டனர். இந்த குழுவில் உள்ள மற்றொருவரும் பின்னர் கைது செய்யப்பட்டார்.
நாடு முழுவதும் பெரும் அதிர் வலைகளை கிளப்பிய இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன.
குறிப்பாக இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “நாடாளுமன்றத்தில் ஒரு பாது காப்பு விதிமீறல் நடந்தது. ஆனால் ஏன் இது நடந்தது? நாட்டின் மிகப் பெரிய பிரச்சினையே வேலையில்லா திண்டாட்டம் தான். இது நாடு முழுவதும் கொந் தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மோடியின் கொள்கைகளால் நாட்டின் இளைஞர்களுக்கு வேலை இல்லை. அவர்கள் விரக்தியின் உச்சிக்கே சென்று விட்டனர். எனவே, நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறலின் பின்னணியில் விலைவாசி உயர்வும், வேலையில்லா திண்டாட்டமுமே உள்ளது.
இந்தப் பிரச்சினைகளில் அரசு கவனம் செலுத்தி இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.