கேள்வி 1: அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அயோத்தியில் இராமர் கோவில் திறக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் சொல்லியிருப்பது எதைக் காட்டுகிறது?
-ச.சீனிவாசன், ஆரணி
பதில் 1:
1.அவர்களிடம் வேறு குறிப்பிடத்தக்க சாதனை ஏதும் இல்லை (வேலைவாய்ப்பு – வளர்ச்சி – கல்வி போன்று).
2. மதச்சார்பின்மை என்ற அரசியல் சட்டத்தின் கூற்றை நாங்கள் மதிப்பவர்கள் அல்ல; மிதிப்பவர்கள்.
3. 2024 பொதுத் தேர்தலுக்கு வடமாநிலங்களில் இராமரையே நம்புகிறோம் – முதலீடாக.
– இப்படிப் பலப்பல அர்த்தங்கள் உண்டு.
—
கேள்வி 2: ஜோதிடர்கள் சொல்வது பொய் என்று தெரிந்திருந்தும், அவர்கள் சொல்வதை நம்புபவர்களைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?
– பா.முகிலன், சென்னை
பதில் 2 : மூளை இருந்தும் பயன்படுத்தத் தெரியாத பாமரத் தன்மையர்கள் என்று அவர்கள் மீது பரிதாபப்படுவதைத் தவிர வேறு ஒன்றுமில்லை!
—
கேள்வி 3: தமிழ்நாடு அரசிற்குத் தொடர்ந்து இடையூறுகளைக் கொடுத்துவரும் தமிழ்நாடு ஆளுநரின் செய்கை தன்னிச்சையானதா?
-ஏ.நடராஜ், மதுராந்தகம்
பதில் 3 : இல்லை; நிச்சயமாக இல்லை. அதற்கு மேலிடத்தின் தூண்டுதல், கண் ஜாடை உண்டு – பின்னணி பற்றிய தகவல்கள் நிச்சயம் வரும் – அம்பலப்படுத்துவோம்!
—
கேள்வி 4: வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களிடம் உங்கள் ஏ.டி.எம். கார்டு எண்ணை சொல்லுங்கள்; நாங்கள் வங்கியில் இருந்துதான் பேசுகிறோம் என்று தொலைப்பேசியில் தொடர்புகொண்டு ஏமாற்றுகிறார்களே, இதைத் தடுப்பதற்கு வழியில்லையா?
– கி.இராமலிங்கம், செம்பியம்
பதில் 4 : தற்காத்து தற்கொண்ட கணக்கினைப் பாதுகாக்கத் தெரியாதவர்கள் நிலை பரிதாபத்திற்குரியது – உங்களுக்காக மற்றவர் உண்ண முடியுமா? எண்ண முடியுமா?
—
கேள்வி 5: தமிழ்நாட்டில் ஆட்சிதான் மாறியிருக்கிறது; ஆனால், அரசு அதிகாரிகள் பழைய ஆட்சியினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறார்கள் என்று சொல்கிறார்களே, இது ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தாதா?
-கே. பழனிச்சாமி, பழனி
பதில் 5 : நிச்சயமாக. முதல் அமைச்சர் இதற்கு நிச்சயம் முடிவு கட்டுவார் என்று நம்புவோம்.
—
கேள்வி 6: இன்றைய இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவது எதிர்கால சந்ததியினரை பாதிக்காதா?
– மு.சுந்தரமூர்த்தி, சேலம்
பதில் 6 : உறுதியாக. எனவேதான் கவலையோடும் பொறுப்போடும் அனைவரும் இணைந்து தீர்வுகாண வேண்டும்.
—
கேள்வி 7 : ஜாதி வாரிக் கணக்கெடுப்பை பீகார் அரசு தொடங்கியுள்ளதே, தமிழ்நாட்டிலும் அது சாத்தியப்படுமா?
– மு.செல்வம், கன்னியாகுமரி
பதில் 7 : நாமும் முயன்றால் முடியாதது ஏதுமில்லை. நிச்சயம் தமிழ்நாடு இதில் ஈடுபடுவது அவசியம்!
—
கேள்வி 8: கரோனா காலகட்டத்தில் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட ஒப்பந்த செவிலியர்களுக்குப் பணி நீட்டிப்புச் செய்ய தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்?
– கி.விஜயகுமார், விழுப்புரம்
பதில் 8 : அரசு தயங்கவில்லை. அதில் நீதிச் சிக்கலும் சட்டச் சிக்கலும் இணைந்துள்ளன. நம் முதலமைச்சர் மனிதாபிமானி. நிச்சயம் விரைவில் முடிப்பார். யாரையும் பாதிக்கப்பட விடமாட்டார். தீர்வில்லாப் பிரச்சினைகள் என்று எதுவும் கிடையாது.
—
கேள்வி 9: பி.ஜே.பி. அண்ணாமலையின் ஆட்டமும் – ஆளுநரின் ஆட்டமும் அளவு மீறிக்கொண்டிருக்கிறதே?
– ச.சரண்யா, சென்னை
பதில் 9 : ‘பீலிபெய் சாக்காடும் அச்சிறும்’ என்ற குறளை நினைவுப்படுத்தி அவர்களுக்கு சொல்லலாம். நுனிக்கொம்பருக்கு தவறான பொருள் கொண்டு விடக் கூடாது என்றே அக்குறளை நாம் கவனத்தில் கொள்ளவில்லை.
—
கேள்வி 10: சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சியில் திருநங்கையர்களுக்கு ஓர் அரங்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறதே, இந்நிலை தமிழ்நாடு முழுவதும் தொடருமா?
– க.ராஜூ, சேலம்
பதில் 10 : தொடருவார்கள் என்று நம்புவோம்.