இம்பால், செப். 14- மணிப்பூரின் தமெங்லாங் மற்றும் நோனி ஆகிய மாவட்டங்களில் நேற்று (13.9.2026) தீவிரவாதிகள் நடத்திய இருவேறு தாக்குதல்களில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர். மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் மைதேயி மற்றும் குக்கி சமூகத்தினரிடையே தொடங்கிய இனக் கலவரத்தில் இதுவரை 306 பேர் உயிரிழந்துள்ளனர்; ஆயிரக் கணக்கானோர் வீடிழந்துள்ளனர்.
இது வரை அந்த மாநிலத்தில் அமைதி திரும்பாத நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் தமெங்லாங் மாவட்டத்தின் டோலன் குக்கி கிராமத்தில் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய முதல் தாக்குதலில் லிங்ங்காய் சிங்சித் என்ற பெண் கொல்லப்பட்டார். படுகாயமடைந்த அவரது கணவர் செய்னெய் சிங்சித், அசாம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவர்களது பச்சிளங்குழந்தையும் இத்தாக்குதலில் காயமடைந்தது. இதேபோல், பிற்பகலில் நோனி மாவட்டத்தின் லாங்பி கிராமத்தில் நடந்த இரண்டாவது தாக்குதலில் ஜூலி கங்தே மற்றும் ஆர். கங்தே ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1990களில் நடந்த குக்கி – நாகா மோதலில் உயிரிழந்த வர்களை நினைவுகூரும் வகையில், குக்கி சமூகத்தினர் செப்டம்பர் 13-ஆம் தேதியை ‘கருப்பு தினமாக’ கடைப் பிடிக்கும் நிலையில் இந்தத் தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. அப்பாவிப் பொதுமக்கள் மீதான இந்தத் தாக்குதல்கள் கோழைத்தனமானவை என்றும், இதனை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் மணிப்பூர் முதல்வர் ஒய். கேம்சந்த் சிங் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
