சென்னை, செப்.6 தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்குமா என்ற கேள்விக்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பதில் அளித்துள்ளார். ஏற்கனவே தவெக ஆதரவு கட்சிகளின் முதற்கட்ட ஆலோசனை கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கவில்லை. இதனால் சிபிஎம் கட்சியின் முடிவு என்ன என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 9ஆம் தேதி பனையூரில் உள்ள தவெகவின் தலைமை அலுவலகத்தில் ஆதரவு கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளது. முதலமச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க பிரிட்டன் செல்வதற்கு முன் கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரமாக இருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலுக்கான தொடக்கப் புள்ளியாக இந்த கூட்டணி அமைந்துள்ளது.
அதேபோல் இடைத்தேர்தலிலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவை எதிர்நோக்கி தவெக காய் நகர்த்தி வருவதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜூலை 1ஆம் தேதி கோவளத்தில் தவெக ஆதரவுக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் பங்கேற்றன. ஆனால் சிபிஎம் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணித்தன.
அதற்கு மாறாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து இரு கட்சிகளும் ஆலோசித்தன. இந்த நிலையில் மீண்டும் தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டணி கூட்டத்தப்பட்டிருக்கிறது. இதற்கு சிபிஅய் மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தவெக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இம்முறை இரு கட்சிகளின் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தவெக ஆதரவு கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கலாமா என்பது தொடர்பாக இன்னும் ஆலோசிக்கவில்லை. ஏற்கனவே சிபிஅய் மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம்.
இப்போது புதிய முயற்சி என்ற முறையில் அனைவரையும் அழைத்து கூட்டணி உருவாக்கும் வகையில் நேற்று வந்து அழைப்பு விடுத்துள்ளனர். நாளை மறுநாள் இதுதொடர்பாக ஆலோசிக்க உள்ளோம். செப்டம்பர் 9ஆம் தேதிக்கு முன் எங்கள் முடிவை அறிவித்துவிடுவோம். கடந்த முறை வெளிப்படையாக ஒரு கூட்டணி அமைக்கப்படுகிறது என்ற வகையில் கூட்டம் கூட்டப்படவில்லை.
இம்முறை நோக்கம் என்ன என்பதை தெரிவித்துள்ளார்கள். இதுதொடர்பாக சிபிஎம் கமிட்டி கூடித் தான் முடிவு எடுத்து அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார். கம்யூனிஸ்ட்களை கூட்டணியில் இணைக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தீவிரமாக இருக்கிறார். ஆனால் பெ.சண்முகம் மற்றும் வீரபாண்டியன் இருவருமே தவெகவுக்கு பிடி கொடுக்காமல் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
