தாராபுரம், செப்.05 பெற்றோரைப் பராமரிப்பதாகக் கூறி 2 கோடி ரூபாய் மதிப்பிலான 4 ஏக்கர் நிலத்தைச் செட்டில்மெண்ட் மூலம் ஏமாற்றிப் பெற்றுக்கொண்டு, பின்னர் பெற்றோர் மற்றும் அக்காவை வீட்டை விட்டு வெளியேற்றிய மகனிடமிருந்து நிலத்தை மீட்டு 76 வயது முதியவரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த தாசர்பட்டியைச் சேர்ந்தவர் முத்துசாமி (76), விவசாயி. இவரது மனைவி புஷ்பாத்தாள் (70). இவர்களுக்கு தண்டபாணி (40) என்ற மகனும், பானுமதி (45) என்ற மகளும் உள்ளனர். கணவரைப் பிரிந்த மகள் பானுமதி தனது 2 குழந்தைகளுடன் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
முத்துசாமிக்கு மூண்டுவேளம்பட்டி கிராமத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. வயது முதிர்வு மற்றும் மனைவிக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக விவசாயத்தைக் கவனிக்க முடியாமல் அவர் சிரமப்பட்டு வந்தார்.
ஏமாற்றிய மகன்: இதனைப் பயன்படுத்திக்கொண்ட மகன் தண்டபாணி, பெற்றோர் மற்றும் அக்காவின் குடும்பத்தை தான் பொறுப்பாகப் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்துள்ளார். மகனின் வார்த்தையை நம்பி முத்துசாமி தனது 4 ஏக்கர் நிலத்தையும் தண்டபாணி பெயருக்குச் செட்டில்மெண்ட் செய்து கொடுத்துள்ளார்.
ஆனால், நிலம் கைக்கு வந்ததும் தண்டபாணி தனது குரூர புத்தியைக் காட்டியுள்ளார். பெற்ற தாய், தந்தை, அக்கா மற்றும் அவரது 2 குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கை மற்றும் தீர்ப்பு: இதனால் அதிர்ச்சி யடைந்த முத்துசாமி, தாராபுரம் வழக்குரைஞர்கள் மூலம் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தார். தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனுவும் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி மூத்த குடிமக்களான முத்துசாமி இணையருக்குச் சொத்தை மீட்டுக் கொடுக்குமாறு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டது.
நிலம் ஒப்படைப்பு: உயர்நீதிமன்ற உத்தரவின்படி விசாரணை நடத்திய தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா, தண்டபாணி பொய்யான வாக்குறுதி அளித்து மூத்த குடிமக்களை ஏமாற்றியதை உறுதி செய்தார்.
இதனைத் தொடர்ந்து, தண்டபாணி பெயரில் இருந்த செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்து உத்தரவிட்ட கோட்டாட்சியர், ரூ.2 கோடி மதிப்பிலான 4 ஏக்கர் நிலத்தையும் மீட்டு முத்துசாமியிடம் ஒப்படைப்பதற்கான உத்தரவு நகலை அவரது குடும்பத்தினர் மற்றும் வழக்குரைஞர்கள் முன்னிலையில் வழங்கினார்.
மகனால் ஏமாற்றப்பட்ட முதிய தம்பதியினருக்குச் சொத்து மீட்டுத் தரப்பட்ட இந்தச் சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பையும், பொது மக்கள் மத்தியில் வரவேற் பையும் ஏற்படுத்தியுள்ளது.
