மதுரை, ஆக. 31–– அரசு அலுவலகங்களில் பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் தங்களிடம் எவ்வளவு ரொக்கம் வைத்திருக்கலாம் என்ற விதியை வகுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நெல்லையைச் சேர்ந்த கலா, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நெல்லை மாவட்டம் முக்கூடல் சார்பதிவாளராக 2021இல் பணியாற்றினேன். அப்போது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் திடீர் சோதனையிட்டனர். நான் கணக்கில் வராத ரூ.45 ஆயிரம் வைத்திருந்ததாக என் மீது வழக்கு பதியப்பட்டது.
இதனடிப்படையில் என் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருமண செலவிற்காகத்தான் பணம் வைத்திருந்தேன். எனவே, என் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், பதிவுத்துறையின் தலைமைப் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை படி, பணியில் இருக்கும்போது தங்களிடம் வைத்திருக்கக் கூடிய பண வரம்பு குறித்தும், இது தொடர்பான பதிவேடுகளை பராமரிப்பது குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ‘‘நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சுற்றறிக்கை, பதிவுத்துறையால் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து அரசு ஊழியர்களையும் உள்ளடக்கிய பொதுவான வழிகாட்டுதல்களோ அல்லது அரசாணையோ இல்லை என்றே தெரிகிறது. அனைத்து பண பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் முறையில் செலுத்த முடியும் போது, இன்றைய சூழலில், அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு தங்களது பயன்பாட்டிற்காக கொண்டு வரும் பணத்திற்கு குறிப்பிட்ட வரம்பை நிர்ணயித்து அரசு தீர்வு காண வேண்டும்.
இத்தகைய நிபந்தனை விதிக்கப்பட்டால், அது அரசு அலுவலகங்களில் லஞ்சத்தைக் கட்டுப்படுத்த ஒரு வகையில் உதவும். அரசு ஊழியர்கள் தேவையின்றி துன்புறுத்தப் படுவதில் இருந்தும் பாதுகாக்கும். ஊழலற்ற நிர்வாகம் அமைய வேண்டும் என்றால் இது போன்ற வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்ட வேண்டும். எனவே, இது குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
