தலைநகரத்துச் சாலைகளில்
தகித்துக் கிடக்கிறது தார் மட்டுமல்ல;
ஏழை மாணவர்களின்
எதிர்காலக் கனவுகளும்!
புத்தகப் பைகளைச் சுமந்த தோள்கள்
போராட்டக் கொடிகளைச் சுமக்கின்றன!
விடைத்தாள்களில் மதிப்பெண் தேடிய கண்கள்
இன்று தெருக்களில் நீதியைத் தேடுகின்றன!
ஒரு தகுதித் தேர்வு
பல தகுதியான உயிர்களைக் குடித்த பின்னும்,
ஏன் இன்னும் இந்த மவுனம்?
மதிப்பெண் அட்டைகள் தீர்மானிப்பதில்லை
ஒரு மருத்துவரின் ஈரநெஞ்சை!
ஏழைக் குடிசைக்குள்
விளக்கேற்றத் துடித்த மருத்துவக் கனவை
ஒற்றைத் தேர்வு கொண்டு
ஊதி அணைப்பதுதான் நீதியா?
மாணவர்கள் தோற்கக்கூடாது
அதிகாரத்தின் அடக்குமுறையும்
அவர்களை அச்சுறுத்தவில்லை.
உயிரைக் கொடுத்துப் படிக்கும் மாணவர்கள்
உரிமைக்காகப் போராட
களமிறங்கி –
பேனா முனைகள் இப்போது
போர் முனைகளாய் மாறுகின்றன!
மாணவர்களின் மருத்துவக் கனவுகள்
சாம்பலாகிப் போகாது!
நிச்சயம் ஒருநாள்
நீதியின் வாசல் திறக்கும்!
– தேன்மொழி,
மாநில மகளிரணி துணைச் செயலாளர், குடியேற்றம்
