சென்னை, ஆக. 26- ‘மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட பால் உற்பத்தியாளர்களின் பொருளாதார நலனை, வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, உடனடியாக பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூபாய் 48 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும்’ என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை ரூபாய் 48 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூபாய் 38 லிருந்து 41 ஆக அதிகரிக்கப்படும் என அறிவித்தார்.
இது வரவேற்பிற்குரியது என்றாலும் கூட, பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.48 ஆக உயர்த்த வேண்டும் எனக் கோரி போராடி வருகின்றனர்.
எனவே, மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட பால் உற்பத்தியாளர்களின் பொருளாதார நலனை, வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, உடனடியாக பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூபாய் 48 ஆக தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்கிட வேண்டும்.
அதேசமயம் நுகர்வோருக்கு பாலின் விலையை அதிகரித்துவிடக் கூடாது. அதற்கேற்ப உரிய மானியங்களை தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்துக்கு வழங்கிட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
ஹீமோபிலியா மருத்துவப் பயனாளிகளுக்கு இலவச மருந்து
அமைச்சர் அறிவிப்பு
சென்னை, ஆக. 26- தமிழ்நாட்டில் ஹீமோபிலியா மருத்துவப் பயனாளிகளுக்கு, எமிசிஜுமாப் மருந்தை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று(25.8.2026), தவெக சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ரவி, “தமிழ்நாட்டில் ஹீமோபிலியா மரபணு கோளாறால் பாதிக்கப்பட்ட மருத்துவ பயனாளிகளுக்கு எமிசிஜுமாப் (Emicizumab) என்ற மருந்து இலவசமாக வழங்கப்படுமா?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் அளித்த பதில்: ஹீமோபிலியா என்பது ஓர் அரிய வகை ரத்த உறைதல் குறைபாட்டு நோயாகும். ஃபேக்டர் 8 இன்ஹிபிட்டர் ஆன்டிபாடி உருவாகியுள்ள ஹீமோபிலியா ஏ மருத்துவப் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படும் மருந்து எமிசிஜுமாப். இந்த மருந்து தற்போது இந்திய அரசால் தேசிய சுகாதார இயக்கத்தின் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
