சென்னை, ஆக. 22– தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று (21.8.2026) நடைபெற்ற சட்டத்துறை மீதான மானியக் கோரிக்கையின் போது, சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் துறை சார்ந்த 11 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழ்நாடு சட்டத் தொகுப்பு இணையதளம்
தமிழ்நாட்டில் இயற்றப்பட்ட அனைத்துச் சட்டங்கள், அவசரச் சட்டங்கள் மற்றும் சட்ட முன்வடிவுகளின் அரசிதழ்கள் பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்பத்துடன் கூடிய “தமிழ்நாடு சட்டத் தொகுப்பு இணையதளம்” எனும் மின்னணுக் களஞ்சியம் உருவாக்கப்படும்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி
சென்னை (பட்டறைப் பெரும்புதூர், புதுப்பாக்கம்), மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தர்மபுரி, சேலம் ஆகிய 12 அரசு சட்டக் கல்லூரிகளிலும் தலா 2 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்படும்.
அரசு சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மேற்கண்ட 12 அரசு சட்டக் கல்லூரிகளிலும் கண்காணிப்பு படக் கருவிகள் அமைக்கப்படும். சென்னை தமிழ்நாடு சட்டப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தை நவீனப்படுத்தும் நோக்கில், அனைத்து அலுவலக ஆவணங்களும் மின்னணு மயமாக்கப்பட்டு ‘மின்-அலுவலக முறை’ அமல்படுத்தப்படும்.
கூடுதல் விடுதி கட்டடம்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பெருங்குடி வளாகத்தில் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளி (SOEL) மாணவியரின் பயன்பாட்டிற்காக, தமிழ்நாடு மாணவர் தங்கும் விடுதி மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனம் மூலம் கூடுதல் விடுதி கட்டடம் கட்டப்படும்.
இத்திட்டங்கள் அனைத்தும் சட்டத் துறையின் செயல்பாடுகளை விரைவுபடுத்தவும், மாணவர் களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் பெருமளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

