ராமநாதபுரம், ஆக. 19- ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் ரூ.25 லட்சத்திற்கும் அதிகமாக ஊழல் செய்து லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் சிக்கிய வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயனுக்கு, சிறந்த ஊழியருக்கான விருது வழங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் பகுதியில் பணியாற்றி வந்த வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் நிலம் தொடர்பான ஆவணங்களை வழங்க லஞ்சம் பெற்றதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.25 லட்சம் வரை முறைகேடு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
லஞ்ச ஒழிப்பு வழக்கில் சிக்கி விசாரணை வளையத்தில் இருக்கும் ஒரு அரசு ஊழியரின் பின்னணியை முறையாக ஆய்வு செய்யாமல், அவருக்கு ‘சிறந்த ஊழியர் விருது’ வழங்கி கவுரவிக்கப்பட்டிருப்பது சமூக ஆர்வலர் களிடையேயும் பொதுமக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுக்கான நபர்களைத் தேர்வு செய்வதில் கடுமையான வழிகாட்டுதல்கள் உள்ள நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருக்கு விருது வழங்கப்பட்டது எப்படி என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

