புதுடில்லி, ஆக. 15- இந்திய பார் கவுன்சிலின் தலைவர் நீண்ட காலம் பதவியில் நீடிப்பதை கேள்விக்குள்ளாக்கியும், அதன் செயல்பாடுகளில் கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளக் கோரியும் வழக்குரைஞர் எம். வரதன் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில், பார் கவுன்சில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு 2 ஆண்டுகள் மட்டுமே நிலையான பதவிக் காலமாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், ஒருவர் அதிகபட்சமாக 3 முறைக்கு மேல் இப்பதவிகளை வகிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 30 ஆண்டுகளில் 20 மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு தலைவர் வாய்ப்பே கிடைக்கவில்லை என்பதால், அனைத்து மண்டலங்களுக்கும் சம வாய்ப்பளிக்கும் வெளிப்படையான சுழற்சி முறையைப் பின்பற்ற வேண்டும். எனவே உடனடியாக கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மொத்த விற்பனை பணவீக்கம் 9.78%
புதுடில்லி, ஆக. 15- நாட்டின் மொத்த விற்பனை விலை பணவீக்கம், கடந்த ஜூலை மாதத்தில் 9.78 சதவீதமாக குறைந்துள்ளது.
முந்தைய ஜூனில் 9.87 சதவீதமாக இருந்த இந்த பணவீக்கத்தில், எரிபொருள், உணவுப் பொருள்களின் விலைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக ஜூலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களில் (2025, அக்டோபருக்குப் பிறகு) மொத்த விற்பனை விலை பணவீக்கம் குறைந்துள்ளது இதுவே முதல்முறையாகும்.
குறிப்பாக, உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் ஜூனின் 5.49 சதவீதத்திலிருந்து, ஜூலையில் 5.44 சதவீதமாக சற்று குறைந்துள்ளது.
எரிபொருள், மின்சாரத்துக்கான பணவீக்கம் ஜூனின் 27.41 சதவீதத்திலிருந்து, ஜூலையில் 20.05 சதவீதமாக கணிசமாக குறைந்துள்ளது. ஆனால், உற்பத்திப் பொருள்களுக்கான பணவீக்கம் 7.48 சதவீதத்திலிருந்து 8.29 சதவீதமாக உயா்ந்துள்ளது.
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஓரளவு குறைந்ததால், ஜூலை மாதத்தில் எரிபொருள் பணவீக்கம் தணிந்துள்ளது. எனினும், மேற்காசியாவில் நீடிக்கும் போர்பதற்றம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக கச்சா எண்ணெய், உரங்களின் விலை தொடா்ந்து அழுத்தத்தில் உள்ளதால் அடுத்தடுத்த மாதங்களிலும் பணவீக்கம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனா்.
ஜூலை மாத மொத்த விற்பனை விலை பணவீக்கத் தரவுகள், புதிய 2022-2023 அடிப்படை ஆண்டின்படி கணக்கிடப்பட்ட 3-ஆவது மாதப் பதிவாகும். மொத்த விற்பனை விலை குறியீட்டுக்குப் பதிலாக அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தியாளா் விலை குறியீடு (பிபிஅய்) முழுமையாக அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், ஜூலை மாத பிபிஅய் பணவீக்கம் ஜூனின் 9.6 சதவீதமாகவே மாற்றமின்றி நீடிக்கிறது.
