ஜெயங்கொண்டம், ஆக.6–- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2026-–2027ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் பேரவை பொறுப்பேற்பு விழா உற்சாகமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. பள்ளி முதல்வரின் தலைமையில் சிறப்பு விருந் தினராக நாகவள்ளி கணேஷ், ஆய்வாளர் (அனைத்து மகளிர் காவல் நிலையம், ஜெயங்கொண்டம்.) கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.
பள்ளி மாணவத் தலைவன், மாணவியர் தலைவி, சிவப்பு, நீலம், பச்சை மற்றும் மஞ்சள் வண்ண அணிகளின் தலைவர்கள், தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் உள்ளிட்ட பல்வேறு மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் பள்ளியில் செயல்படும் சீருடைப்படை அமைப்புகளின் தலை வர்கள் ஜனநாயக முறையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் தலைவர்களுக்குச் சிறப்பு விருந்தினர் மாணவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட அடையாளவில்லையை அணிவித்தார். தொடர்ந்து, மாணவர் தலைவர்கள் தங்கள் பொறுப்புகளை நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றுவதாக உறுதிமொழி ஏற்றனர்.
சிறப்பு விருந்தினர் தன்னுடைய சிறப்புரையில், “இன்றைய மாணவர் தலைவர்களே நாளைய சமுதாயத் தலைவர்கள். தலைமை என்பது அதிகாரம் அல்ல; அது பொறுப்பும் சேவையும் ஆகும். மாணவர்கள் ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்தினார். சிறப்புரையை தொடர்ந்து இனிமையான இசையுடன் மாணவிகள் பரத நாட்டி யத்தை அரங்கேற்றினர். இது விழாவை மேலும் மெருகூட்டியது.
விழாவில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் புதிய தலைவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மாணவர்களிடையே தலைமைத்துவம், பொறுப்புணர்வு மற்றும் ஜனநாயகப் பண்புகளை வளர்க்கும் வகையில் நடைபெற்ற இப்பொறுப்பேற்பு விழா பள்ளியின் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.
