புதுடில்லி, ஆக.3 திருமணம் சாராத ‘லிவ்-இன்’ உறவில் இருக்கும் போது, ஒரு பெண் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டால், அந்த ஆணின் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498ஏ-இன் கீழ் வழக்குத் தொடர முடியும் என்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியத் தீர்ப்பளித்துள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டம், 1860-இன் பிரிவு 498ஏ என்பது, ஒரு பெண்ணின் கணவர் அல்லது அவரது உறவினர்களால் அப்பெண் சந்திக்கும் கொடுமைகளுக்கு எதிரான சட்டப் பாதுகாப்பை வழங்குகிறது.
இந்நிலையில், ‘லிவ்-இன்’ உறவில் இருக்கும் நபர்கள் மீதும் இந்தச் சட்டப்பிரிவின் கீழ் வழக்குத் தொடர முடியுமா என்பது தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என். கோதிஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்து அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
தற்காலத்தில் ‘லிவ்-இன்’ உறவுகள் என்பது தவிர்க்க முடியாத ஒரு சமூக யதார்த்தமாகிவிட்டன. திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்துடன் கூடிய, திருமண உறவைப் போன்ற தன்மை கொண்ட ‘லிவ்-இன்’ உறவில் இருக்கும் பெண்களுக்கும் பிரிவு 498ஏ முழுமையாகப் பொருந்தும். இத்தகைய உறவில் இருக்கும் ஒரு பெண் கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஆண் மீது இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 498ஏ-இன் கீழ் தாராளமாக வழக்குத் தொடர முடியும். திருமண பந்தத்தைப் போலவே ‘லிவ்-இன்’ உறவில் வாழும் பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த உத்தரவு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
