ரகசியக் காப்பு உறுதிமொழி என்னாயிற்று? சட்டமன்றத்தின் சிறப்புரிமை என்னாயிற்று?

4 Min Read

தமிழ்நாடு வேளாண்மை நிதிநிலை அறிக்கையை திருப்பதி கோயிலில் வைத்து பூஜையா?

தமிழ்நாடு வேளாண்மை தொடர்பான நிதிநிலை அறிக்கை திருப்பதி கோயிலில் வைத்து பூஜையா? ரகசியக் காப்பு உறுதிமொழி என்னாயிற்று? சட்டமன்றத்தின் சிறப்புரிமை என்னாயிற்று என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு புதிய த.வெ.க. கூட்டணி அரசின் முதல் வரவு செலவுத் திட்டம் அடுத்த வாரம் சட்டப்பேர வையில் சமர்ப்பிக்கப்ட இருக்கிறது. இந்நிலையில் வேளாண் நிதிநிலை அறிக்கையின் முதன்மைப் பிரதியை, இன்று (1.8.2026) காலை தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் வினோத், ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குக் கொண்டு சென்று பூஜை செய்துள்ளார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சிக்கும், கண்டனத்திற்கும் உரியதாகும். இது சட்டமன்றத்தின் மாண்புக்கும், மரபுக்கும், சிறப்புரிமைக்கும் எதிரானதாகும்.

மிகவும் ரகசியமாக வைக்கப்பட வேண்டிய ஒன்றாகும்!

ஒரு மாநிலத்தின் ஓர் ஆண்டு கால எதிர்காலத்தையும், பொருளாதாரத்தையும் தீர்மானிக்கும் மிக முக்கிய ஆவணமான நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் வரை மிகவும் ரகசியமாக வைக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

பட்ஜெட் என்பது வெளியிடப்படும் வரை பாது காப்பாக இருக்கவேண்டிய ரகசிய ஆவணம்! ஒன்றிய அரசு பட்ஜெட் தயாரிக்கும் போது, அக்குழுவில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் தயாரிப்புப் பணி தொடங்குவது முதல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வரை தங்கள் வீடுகளுக்குக் கூடச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. சுமார் 15 நாள்கள் அவர்கள் நிதி அமைச்சக அலுவலகத்திலேயே தங்கிப் பணியாற்றுவார்கள். இந்த அர்ப்பணிப்பைப் பாராட்டும் வகையில், பட்ஜெட் தயாரிப்பு நிறைவடைந்ததும் ஒன்றிய நிதியமைச்சர் அவர்களுக்கு இனிப்பு (அல்வா) வழங்கிச் சிறப்பிப்பது வழக்கம்.

வரலாறுகள் தெரியுமா
இன்றைய ஆட்சியாளர்களுக்கு?

இந்தியாவின் முதல் பட்ஜெட் (1947-1948) உரையின் சில பகுதிகளைக் குறிப்பிட்டு, அன்றைய இங்கிலாந்து அரசின் கருவூலத் தலைவர் ஹூக் டால்டன் என்பவர், பத்திரிகையாளர்களிடம் செய்தி பகிர்ந்த காரணத்தால் பதவியை விட்டே அவர் விலக வேண்டியிருந்தது. அப்போது ஆர்.கே.சண்முகம் அவர்கள் தான் நிதியமைச்சர்.

பின்னர் ஜான் மத்தாய் நிதியமைச்சராக இருந்தபோது, குடியரசுத் தலைவர் மாளிகையில் அச்சடிக்கும் இடத்தில் வெளியாகிவிட்டது என்பதால், பின்னர் அது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு ரகசியமாக அச்சிடப்பட்டது. இந்த வரலாறுகள் எல்லாம் தெரியுமா இன்றைய ஆட்சியாளர்களுக்கு?

ஆசிரியர் அறிக்கை

இவ்வளவு கட்டுப்பாடுகளும் ரகசியத்தன்மையும் பேணப்பட வேண்டிய ஒரு முக்கிய ஆவணத்தை, அரசு அலுவலகங்களைக் கடந்து, தமிழ்நாட்டு மாநில எல்லையைக் கடந்து, வேறு ஒரு மாநிலத்தில் உள்ள கோயிலுக்குக் கொண்டு சென்று, பார்ப்பனர்களிடம் கொடுத்து, சிறப்புப் பூஜை செய்ய வைத்தது இந்திய அளவிலேயே இதுவரை நடந்திராத ஒரு மோசமான முன்மாதிரி ஆகும்!

ரகசியத் தகவல்கள் கசியாதா?

கோயில்களில் தொடர்ச்சியாக நிதி மோசடிகள் சர்ச்சைகள் தொடரும் சூழலில், இது போன்ற செயல்கள் மூலம் பட்ஜெட்டின் முக்கியப் பக்கங்கள் மற்றும் ரகசியத் தகவல்கள் கசியாதா? இதன் மூலம் முன்கூட்டியே ஒப்பந்தங்களைத் தயார் செய்யவும், முறைகேடுகளுக்கு வழிவகுக்கவும் வாய்ப்பாகாதா?

 

குறிப்பாக வேளாண் நிதி நிலை அறிக்கை மிகவும் முக்கியமான ஒன்றல்லவா? சாமானிய மக்க ளுக்கும், நாட்டின் அடிப்படையான விவசாயம் சார்ந்த வர்களுக்குமான அதிமுக்கியமான வேளாண் நிதிநிலை அறிக்கையைச் சட்டப்பேரவையின் மரபுகளையும், நிதிநிலை அறிக்கையின் ரகசியத் தன்மையையும் காக்க வேண்டிய இடத்தில் இருக்கும் ஓர் அமைச்சரே இத்தகைய செயலில் ஈடுபட்டது ஜனநாயக நடை முறைகளுக்கு எதிரானது ஆகும்.

ரகசியக் காப்பு உறுதிமொழிக்கு
முரணானது இல்லையா?

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ரகசியக் காப்பு உறுதிமொழி ஏற்றுத் தானே, பதவியேற்றுள்ளார்கள். இது ரகசியக் காப்பு உறுதிமொழிக்கு முரணானது இல்லையா?

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடல்லவா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலேயே இது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இன்றும் அதை ஒழிக்க ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க, அரசு பெரும் சூழ்ச்சிகளைச் செய்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவின் மதச்சார்பின்மையை மீறி, ரகசியக் காப்பு உறுதிமொழியை மீறி, சட்ட மன்றத்தில் தாக்கல் செய்து விவாதிக்கப்பட வேண்டிய ஓர் ஆவணத்தை, சட்டமன்றத்தின் சிறப்புரிமையை (Privilige of Legislature Assembly) மீறி, திருப்பதி கோயிலுக்குச் சென்று வழிபட்டு விட்டு வருவது என்ன விளையாட்டு வேலையா?

தனிப்பட்ட முறையில், அந்த அமைச்சருக்குக் ‘கடவுள்’ நம்பிக்கை இருக்கலாம்; அவர் எந்தக் கோயி லுக்கும் சென்று வழிபடலாம்! அது அவரது உரிமை. ஆனால், அமைச்சர் என்ற முறையில், அதுவும் இது வரை வெளியிடப்படாத, சட்டமன்றத்தில் மட்டுமே வெளியிடப்பட வேண்டிய ஓர் ஆவணத்தை எடுத்துக் கொண்டு, அதை அர்ச்சகர்களிடம் கொடுத்து, பூஜை செய்து வழிபட, அவருக்கு என்ன உரிமை இருக்கிறது?

இன்று இவர் திருப்பதிக்குச் செல்கிறார்; நாளை ஓர் அமைச்சர் வேளாண் பட்ஜெட்டையோ, பொது பட்ஜெட்டையோ எடுத்துக்கொண்டு, கருநாடகாவிற்குச் செல்லமாட்டார் என்பது என்ன நிச்சயம்!

அந்தந்த அமைச்சர்கள், அவரவர் மத நம்பிக்கைக்கு ஏற்ப, சர்ச்சுக்கும், மசூதிக்கும் ஆவணங்களை எடுத்துச் செல்வார்களா?

முதலமைச்சர் என்ன செய்யப் போகிறார்?

தமிழ்நாட்டு அமைச்சர்களின் முதிர்ச்சியற்ற செயல்களுக்கு இது ஒரு மோசமான எடுத்துக்காட்டு!

இனியும், அந்த அமைச்சர் பதவியில் நீடிக்கலாமா?

வேளாண் துறை அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? அரசு உயர் அதிகாரிகளுக்கு இதன் தீவிரத் தன்மை தெரியாதா? தன்னுடைய அமைச்சரவையின் செயல்க ளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய முதலமைச்சர் என்ன செய்யப் போகிறார்?

கி.வீரமணி

 

   தலைவர்,
திராவிடர் கழகம்

1.8.2026          

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *