மாற்றம் அல்ல; மக்களுக்கு ஏமாற்றமே!

5 Min Read

புதிய அரசின் பட்ஜெட்: வெறும் மத்தாப்பு, வாணவேடிக்கை
உப்பு சப்பில்லாத, பழைய திட்டங்களையே சார்ந்து,
புதிய வர்ணப் பூச்சு பூசிய மந்தமான பட்ஜெட்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

புதிய அரசின் பட்ஜெட் வெறும் மத்தாப்பு, வாண வேடிக்கை போன்றவற்றைத் தவிர, மற்றபடி உப்பு சப்பில்லாத, பழைய திட்டங்களையே சார்ந்து, புதிய வர்ணப் பூச்சு பூசிய மந்தமான பட்ஜெட் ஆகும். மாற்றம் அல்ல; மக்களுக்கு ஏமாற்றமே! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், 108 இடங்களை மட்டுமே பெற்று ஆளுங்கட்சியான த.வெ.க. என்ற புதுக்கட்சி, அதற்குரிய அறுதிப் பெரும்பான்மை பெறாத நிலையில்,  எதிர்க்கட்சியாக தற்போதுள்ள தி.மு.க.வின் கூட்டணியில் வென்ற கட்சிகள் தலா இரண்டு இடங்களையும், காங்கிரஸ் கட்சி 5 இடங்களையும் பெற்ற நிலையில், அவர்களது கூட்டணித் தாவல்மூலம் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திட்ட நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல் வரவு – செலவுத் திட்டம் நேற்று (5.8.2026) நிதியமைச்சர் மரிய வில்சன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க. அரசின் மீது குற்றப்பத்திரிகை –
‘புகார் காண்டமாக’வே அமைந்த பட்ஜெட்!

இந்த ‘பட்ஜெட்’ வருவதற்கு முன்பே, நிதிநிலை பற்றியும், முந்தைய தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட கடன் சுமைபற்றியும் ஒரு வெள்ளை அறிக்கை வெளி யிடப்பட்டு, இந்த பட்ஜெட்  தனிச் சிறப்புடைய சாதனை பட்ஜெட்டாக இருக்காது என்பதற்கு முன்னுரை போல விளம்பரப்படுத்தப்பட்டது!

அதையே பட்ஜெட்டிலும் திரும்பச் சொல்லியது. ஏராளமான கடன், கடன் சுமை, ஒவ்வொருவர் தலை யிலும் இவ்வளவு, என்ற ஒரு முந்தைய தி.மு.க. அரசின் மீது குற்றப்பத்திரிகை அமைந்த ‘புகார் காண்டமாக’வே அமைந்துள்ளது ஒரு வகை விசித்திரமானதாகும்.

முந்தைய தி.மு.க. அரசு, அதிகக் கடன் வாங்கியது என்று ‘பூதாகரமாகச்’ சொல்லி, புதிய தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் பழைய தி.மு.க. ஆட்சியின் சிறப்பான மக்கள் நலத் திட்டங்களையே நீடிக்க வைத்துள்ளது தவிர்க்கப்பட முடியாத மக்கள் நலத் திட்டங்களை தி.மு.க. ஆட்சி சாதனைகளாக செய்தது என்பதற்கு அடையாளமாகும். அவற்றை ரத்து செய்ய முடியாத அளவுக்கு மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களாக அவை அமைந்துவிட்டதால், அவற்றைக் கைவிட  முடியாது என்பதால்தான், பெயர் மாற்றங்களைச் செய்து – அதில் தங்கள் கட்சி பெயர் வருமாறுதான் அமைத்துள்ளது!

எந்தப் பெயரில் அழைத்தாலும்,
‘ரோஜா, ரோஜாதான்!’

பெயர் மாற்றம் செய்ததைத் தவிர, தி.மு.க. ஆட்சி செய்தவற்றைத் தாண்டி –  எங்கள் ஆட்சியால் அதைக் கைவிட முடியாது என்பதன்மூலம், தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் – எந்தப் பெயரில் அழைத்தாலும், ‘ரோஜா, ரோஜாதான்’ என்ற ஆங்கிலப் பழமொழிக்கொப்ப அமைந்துள்ளது.

புதிய முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களது ஆட்சியின் நிதிநிலை அறிக்கை தி.மு.க.வின் திட்டங்களை ஏற்பது என்பதைவிட, அதன் தவிர்க்க முடியாத மக்கள் நல உரிமைத் திட்டங்கள் என்பதைத் தனது ஒப்புதல் வாக்குமூலமாக இந்த பட்ஜெட் அறிவிப்பில் தெளிவாக்கப்பட்டு உள்ளது!

கடன் வாங்குவது, ஆட்சியின் மேலாண்மைக்கு – வளர்ச்சிப் பொருளாதாரத் தேவையின் காரணமாக இன்றியமையாதது!

அரசின் வரவு – செலவுத் திட்டங்களைப்பற்றிய இந்தச் செய்தி பொதுமக்களுக்கும், ‘‘படித்த பாமரர்க ளுக்கும்’’ புரிய வைக்கவேண்டிய முக்கிய செய்தியாகும்.

மக்களின் நலனுக்காக அரசுகள் கடன் வாங்குவதும், செலவழிப்பதும் இயல்பானது!

நாட்டின் வளர்ச்சிக்காக, மக்களின் நலனுக்காக அரசுகள் கடன் வாங்குவதும், செலவழிப்பதும் இயல்பானது. (தனி மனிதரின் வரவு – செலவுத் திட்டம்போல ஆபத்தானதோ, அதிர்ச்சி அடைய வேண்டிய செய்தியோ அல்ல).

அடுத்து கல்வி வளர்ச்சி, மக்கள் நலவாழ்வு (Health), தொழில் வளர்ச்சி போன்றவற்றிற்காக வாங்கும் கடன் வருங்கால வளர்ச்சிக்கான சமூக முதலீடு (Social Development Investment) ஆகும்.

‘இன்னும் இரண்டு ஆண்டுகள், புதிய திட்டங்கள் ஒன்றும் செய்ய முடியாது’ என்று பட்ஜெட்டில் நிதி யமைச்சர்மூலம் சொல்ல வைத்திருப்பது, ‘‘ஆடத் தெரி யாதவள் அரங்கு கோணல் என்றாளாம்’’ என்பதுபோல, சரியாகத் தன்னால் ஆட முடியாது என்று கூறுவது போன்ற ஒன்றாகும்.

தமிழ்நாட்டின்
நிதித்துறை செயலாளர் சித்திக்

கடன்பற்றியும், வளர்ச்சியை நோக்கிய அரசின் பயணத்திற்கு அது தேவைப்படும் ஒன்று, என்ப தைப்பற்றியும் இவ்வாண்டு நிதிநிலை அறிக்கைத் தாக்கலுக்குப் பிறகு, புதிய தமிழ்நாட்டின் நிதித்துறை செயலாளர் திரு.சித்திக் அவர்கள் செய்தியாளர்களிடையே கூறியுள்ள சில கருத்துகள் யதார்த்தத்தை அப்பட்டமாக விளக்குவதாக உள்ளது.

‘‘1. ஒன்றிய அரசிடமிருந்து வரவேண்டியது 7000 கோடி ரூபாய்.

  1. தமிழ்நாடுஉள்படஎந்தமாநிலஅரசும், ஒன்றியஅரசின்அனுமதிஇல்லாமல்கடன்வாங்கமுடியாது; அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள்தான் கடன் வாங்கப்படுகிறது. ஒன்றியஅரசுக்கும்இதேநிலைதான்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டில், 1.22 லட்சம் கோடி ரூபாய்க்குக் கடன் வாங்கப்படும்.

இது மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3 சதவிகிதத்திற்கும் கீழ்தான் உள்ளது.

கடந்த மூன்று மாதங்களில், (இந்த அரசால்) 21,000 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது!

கடன் வாங்குவதைக் குைறக்க முடியாது!

அடுத்த 50 ஆண்டுகளுக்குக்கூட கடனைக் குறைக்க முடியாது.

வருவாயைப் பொறுத்துக் கடன் வாங்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் மொத்த வருவாயைவிட 3.40 மடங்கு கூடுதலாக கடன் வாங்கப்பட்டது.

இது, இந்த ஆண்டில் 3.17 சதவிகிதமாகக் குறையும்; வருவாய் அதிகரிப்புக்கு ஏற்ப, அதிக நிதி தேவைப்படும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.’’

மாய்மாலக் கண் பொருளாதார
அறிவு சூன்யங்களுக்குரிய தக்க பதில்!

மேலே காட்டியுள்ள இன்றைய புதிய நிதிச் செய லாளர் அவர்களின் கருத்துதான் ‘‘அய்யோ, கடனில் மூழ்குகிறோமா’’ என்ற மாய்மாலக் கண் பொருளாதார அறிவு சூன்யங்களுக்குரிய தக்க பதில்!

இதைத்தான் தி.மு.க. ஆட்சியில், நிதியமைச்சராக இருந்த ஆற்றல்மிகு நண்பர் தங்கம் தென்னரசு, முன்பும் குறிப்பிட்டார்; நேற்றும் சுட்டிக்காட்டியுள்ளார்!

மாற்றம் அல்ல;
மக்களுக்கு ஏமாற்றமே!

எனவே, Lackluster Budget ‘‘மந்தமான’’ என்ற புதிய அரசின் பட்ஜெட், ஒரு சில மத்தாப்பு, வாண வேடிக்கை, மாமன் சீர் என்பது போன்றவற்றைத் தவிர, மற்றபடி உப்பு சப்பில்லாத, பழைய திட்டங்களையே சார்ந்து, புதிய வர்ணப் பூச்சு பூசிய பட்ஜெட்டே ஆகும்.

மாற்றம் அல்ல; மக்களுக்கு ஏமாற்றமே!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை       

6.8.2026          

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *