சென்னை, ஜூலை 29- தமிழ்நாட்டில் ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவப் படிப்புகளுக்கான 2025-2026ஆம் கல்வியாண்டு கலந்தாய்வில் அரசுப்பணியில் உள்ள மருத்துவர்களுக்கான மாநில ஒதுக்கீட்டு இடங்கள் தற்போது வரையில் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.
இந்நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு திருப்பி அளித்து, அதன்மூலம் தகுதிப் பட்டியலின் அடிப்படையில் அடுத்தக்கட்ட கலந்தாய்வை நடத்த ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்வாணி என்பவர் உள்பட மருத்துவ மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் அராதே ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ”தமிழ்நாட்டில் காலியாக உள்ள 151 ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவப் படிப்பு இடங்களை நாளை (இன்று) மாலைக்குள் ஒன்றிய அரசிடம், தமிழ்நாடு அரசு ஒப்படைக்க வேண்டும். குறிப்பாக மாநில ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் வீணாகும் இந்த இடங்களை அகில இந்திய தகுதிப் பட்டியல் மூலம் நிரப்பும் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பு வழக்குரைஞர் மற்றும் மருத்துவ சங்கத்தின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அவர்களது கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.
