சென்னை, ஜூலை 29- அரசு பேருந்துகளில் பயணிப்போர் கைப்பேசியில் அதிக சத்தத்தில் பாட்டு கேட்க, காட்சிப் பதிவு பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் புளூடூத், இயர்போன், ஹெட்போன் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள், சக பயணிகளுக்கு எந்தவித இடையூறும் இன்றி அமைதியாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை புதிய கட்டுப்பாடுகளையும் பயண நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை அரசுச் செயலாளர் நிர்மல்ராஜ், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அனைத்து மண்டல அரசுப் போக்கு வரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர் களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், “மோட்டார் வாகன (ஓட்டுதல்) ஒழுங்கு முறை 2017இன் விதி 5(10)-இன்படி, பேருந்துகளில் உரத்த ஒலியில் இசை இயக்கப்படாமல் இருப்பதை ஓட்டுநர்கள் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் விதி 1989இன் விதி 228இன் படி, சக பயணிகளுக்கு இடையூறு அல்லது சிரமத்தை ஏற்படுத்தும் செயல்கள் முறைகேடாகக் கருதப்படும்.
இதன்படி பயணம் முழுவதும் கைப்பேசியில் உரத்த குரலில் தொடர்ந்து பேசுவது, இயர்போன் அல்லது ஹெட்போன் இல்லாமல் ஸ்பீக்கரில் பாட்டு கேட்பது அல்லது பார்ப்பது ஆகியவை முற்றிலும் தவிர்க் கப்பட வேண்டும்.
புளூடூத், இயர்போன் அல்லது ஹெட்போன் பயன்படுத்தி மட்டுமே பயணிகள் கைப்பேசியைப் பயன்படுத்த வேண்டும். பிற பயணிகளின் அமை திக்கு பங்கம் விளை விக்கக் கூடாது.
இது தொடர்பாக அனைத்துப் பேருந்துகளின் உட்புறத்திலும் (முன்பகுதி, நடுப்பகுதி மற்றும் பின்பகுதி) பயணிகளுக்குத் தெளிவாகத் தெரியும் வகையில், “கைப்பேசியில் ‘ஸ்பீக்கர் ஒலி’ வேண்டாம்!” என்ற விழிப் புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட வேண்டும்.
பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு பணித் தொடக்க நேரத்தின் போது இந்த வழிமுறைகள் குறித்துத் தெளிவாக அறிவுறுத்தப்பட வேண்டும்.
இக்கட்டுப்பாடுகள் உடனடியாக நடை முறைக்கு வருவதுடன், பேருந்துகளில் விழிப் புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட ஒளிப்பட ஆதாரங்களுடன் கூடிய அறிக்கையை அரசிற்கும், தலைமை அலுவலகத்திற்கும் விரைந்து அனுப்ப வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
