சென்னை, ஜூலை 27– தமிழ்நாட்டில் கடந்த 40 ஆண்டு களாக 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் கல்வித் துறை அதிகாரிகளாலும், பள்ளித் தலைமை ஆசிரியர்களாலும் மிகவும் கட்டுக்கோப்பாகவும் நேர்மை யாகவும் நடத்தப்பட்டு வந்தன.
இரும்புத் திரை
எப்பேர்ப்பட்ட செல்வாக்கு படைத்த வர்களாலும், கேள்வித் தாள்களைக் கசிய வைக்கவோ, விடைத்தாள் திருத்தலில் முறைகேடு செய்யவோ முடியாத அளவிற்குப் பாதுகாப்பான ‘இரும்புத்திரை’ அமைப்பாக நமது மாநிலக் தேர்வுத்துறை இயங்கி வந்தது.
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதல் குமரிமுனையில் உள்ள புனித மைக்கேல் தொடக்கப் பள்ளி வரை, அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்து, கடந்த 40 ஆண்டுகளில் லட்சக்கணக்கான ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் இந்த மாநிலக் கல்விக்கட்டமைப்பு உருவாக்கிக் காட்டியுள்ளது.
செயற்கை மாயை
மாநிலத்தின் இந்தச் சிறப்பான கல்வி முறையை முற்றிலும் சிதைக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட ‘நீட்’தேர்வு, சாமானிய மாணவர்களின் மருத்துவக் கனவுக்குப் பெரும் தடையாக மாறியுள்ளது. தனியார் பயிற்சி மய்யங்களில் பல்லாயிரக்கணக்கில் பணம் செலுத்திப் படித்தால் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்ற செயற்கையான மாயை உருவாக்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு எதிர்ப்பாளரின் தலைமையில் குழுவா?
அண்மைக்காலமாக, வசதி படைத்தவர்களின் பிள்ளைகளுக்காகக் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு வினாத்தாள்கள் விற்கப்பட்டதும், நீட் தேர்வில் நடந்த பெரும் முறைகேடுகளும் அம்பலமாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்தத் தொடர் முறை கேடுகள் வெளிச்சத்திற்கு வந்த பிறகும், தவறைச் சரிசெய்வதற்குப் பதிலாக, விமானப்படை மூலம் கேள்வித் தாள்களைக் கொண்டு செல்வது, தனியார் நிறுவனங்களின் கண்காணிப்பிலும், இட ஒதுக்கீடு மற்றும் பணியாளர்களுக்கான விடுமுறைகளை எதிர்க்கும் அய். டி. நிறுவன தலைவரைக் கொண்டு குழு அமைத்து தேர்வுகளை நடத்துவது போன்ற நம்பிக்கையற்ற நடவடிக்கைகளையே நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது என சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
